சிங்கமொன்று முதுமைகண்டு
காட்டில் வாழ்ந்து வந்தது!
காட்டைப் போட்டுத் தாக்குகின்ற
கர்ஜனைகள் ஓய்ந்தது!
பல்லும் நகமும் பறிகொடுத்துக்
கொல்லும் திறனும் மாய்ந்தது!
அச்சமூட்டும் பிடரிமட்டும்
எச்சமாக இருந்தது!
வேட்டையாடத் தெம்பிலாது
வேறு மார்க்கம் கண்டது!
காணுகின்ற விலங்குகளைக்
கனிவாய்ப் பேச அழைத்தது!
நம்பிவந்த விலங்கையுண்டு
நாளும் உயிர் பிழைத்தது!
பசித்த நாளில் குள்ளநரியை
ருசித்துப் பார்க்க நினைத்தது!
நயந்துபேசி நரியாரை
நைச்சியமாய் அழைத்தது!
புரிந்துகொண்ட நரியாரும்
போகத் தயக்கம் கொண்டது!
காணவந்தோர் கால்தடங்கள்
காட்டிச் சிங்கம் அழைத்தது!
""விரும்பிவந்த கால்தடங்கள் -
வேந்தே! நானும் பார்க்கின்றேன்!
திரும்பி வந்த கால்தடங்கள்
தெரியவில்லை, வேர்க்கின்றேன்!''
-என்று சொல்லி நரியுமே
எட்டி நடையைப் போட்டது!
புத்தியோடு நடந்ததனால்
பத்திரமாய் மீண்டது!
எத்திப்பிழைத்த சிங்கமோ
நெத்தியடியில் சுருண்டது!