அஞ்சாம் வகுப்பில் அருண் அண்ணா
அழகாய்ப் படித்து வந்தானே!
அண்ணாவுக்கு அருந்துணையாய்
அகிலாக்குட்டி பிறந்தாளே!
அஞ்சு மாதக் குழந்தையவள்
அண்ணனைக் கண்டதும் சிரிப்பாளே!
விடுமுறை நாளில் அருண் அண்ணா
குளிக்கவும் விடுமுறை விட்டானே!
அம்மா பலமுறை அர்ச்சித்தும்
அடமே செய்து திரிந்தானே!
மொட்டுத் தங்கையை மடியிலிட்டு
மெட்டுடன் இசைத்தான் ஒரு பாட்டே!
அண்ணன் மடியில் சிரித்தபடி
அகிலா ஈரம் செய்தாளே!
குளியா விரதம் உடன்முடித்துக்
குளித்திட அண்ணன் விரைந்தானே!