வண்டி மேல குருவியும்
வந்து மெல்ல அமர்ந்துமே
"இந்த வண்டி போவதும்
எதனால்?' என்று கேட்டது.
""என்னால் தானே வண்டியும்
எல்லா இடமும் போகுது''
என்றே அங்கு சக்கரம்
எடுத்துச் சொல்லி கனைத்தது!
அச்சும் அதனை மறுத்தது!
""அச்சம் இன்றி சக்கரம்
அச்சில்லாமல் சுற்றுமா?...
அதனால் நானே காரணம்''
என்றே அச்சும் சொன்னது.
இழுக்கும் மாடு விட்டதா...?
""தாங்கி நானும் பிடிக்கிறேன்
தாங்கவில்லை நானெனில்
எவ்வாறேகும் வண்டியும்?...
எல்லாம் சாயும்'' என்றது.
ஒவ்வோர் உறுப்பும் வண்டியின்
"ஓட்டம்' தன்னால் என்றன.
வண்டிக்காரன் காதிலே
வாங்கிக் கொண்டு கூறினான்.
""நன்றா நீங்கள் சொல்வதும்?
நான்...நான் என்றே உரைக்கிறீர்!
நன்கு வண்டி சென்றிட
நாமெல்லோரும் காரணம்.
என்ற எண்ணம் மட்டுமே
இங்கு வேண்டும் நமக்குமே...
.."நான்'...என்பதுவே பிரிவினை!...
"நாம்' என்பதுவே ஒற்றுமை...
"நான்'..என்பதனை விட்டுமே
"நாம்'என்றிணைந்தே வாழுவோம்!