படிப்பது சுகம் என நினைப்பார் -அவரைத்
தடுத்து நிறுத்த முடியாது;
எடுத்துக் கொண்டு போவார் - குறிப்பு
எடுத்ததும் திருப்பிக் கொடுப்பார்!
அரசின் நூலகம் எல்லாம் - உறுப்பினர்
காப்புத் தொகையும் பெற்றிடும்;
இரவல் பெற்ற நூலையும் - உரிய
தேதியில் கொடுத்திட வேண்டும்!
நூலுக் குரியவர் அதிலே - தான்
வாங்கிய தேதியைக் குறிப்பார்;
பெயரும் எழுதி வைப்பார் - அது
யாருடை யதெனும் அடையாளம்!
சங்கர லிங்க நாடார் - வீட்டில்
தங்கி இருந்தார் மகாத்மா!
நெருங்கிப் பழகிய காந்தியார் - அவருடைய
புத்தகம் கேட்டுப் பெற்றார்!
புத்த கத்தையும் நாடார் - விரும்பி
படிக்கட்டும் என நினைத்தார்;
"பாக்கியம் எனக்கு' என்று - நாடார்
பெருமை பட்டுக் கொண்டார்!
நான்கு திங்கள் கழித்து - ஒருநாள்
அஞ்சலில் ஒரு பொதி வந்தது;
வாங்கிப் பிரித்துப் பார்த்தால் - அதிலே
புத்தகம் ஒன்று இருந்தது!
நூலுக்குள்ளே கடிதம் - ஒன்று
இருந்ததை எடுத்துப் படித்தார்;
மனநிறை வுடனே நகைத்தார் - நாடார்
பக்கத்திலிருந்தவர் கேட்டார்;
""காந்தி யாருக்கு நீவிர் - புத்தகம்
அன்பளிப்பாகவே கொடுத்தீர்;
என்ன காரணத் தினாலதை - அவரும்
திருப்பி அனுப்பி வைத்தார்?''
""என்னுடை நூல்களில் எல்லாம் - நான்
எழுதும் வாசகம் இதுதான்;
கண்போல் காக்கிற நூலை - படிப்பவர்
திருப்பி தந்திட வேண்டும்....
இந்தக் குறிப்பும் பார்த்து - மகாத்மா
எனக்கு விடுத்திருக் கின்றார்;
...எத்தனை பேர்க்கு இதுபோல் - பொறுப்பு
உண்டென...நாடார் கேட்டார்!
இப்படியாகவே நாமும் - பிறரிடம்
பெற்றதைத் திருப்பிக் கொடுப்போம்;
காந்தியாரிடம் கற்றதை - வாழ்வில்
நாமும் கடைப்பிடித் திடுவோம்!