ரமாவிற்கு வயது 20. ஆனால் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவள்! அவளது சிறு வயதிலிருந்தே அப்படித்தான்! வீட்டிற்கு ஒரே மகள்தான் என்றாலும் தாய், தந்தையர் படும் கஷ்டங்களை நினைத்து அது வேண்டும்...,இது வேண்டும் என்று எது வுமே கேட்க மாட்டாள்! அவள் சுபாவம் அப்படி! பிறர் மனம் அறிவதில் கெட்டிக்காரி!
ஏழ்மை என்பது குடும்பத்திற்குத்தான்....மனதிற்கு அல்ல...!
அம்மாவும், அப்பாவும் ஒரு முதியோர் இல்லத்தில் சமையல் செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரமா ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனைப் பிரிவில் வேலை செய்கிறாள். கைக்கும் வாய்க்கும் கடனில்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்று வேலைக்குச் செல்ல பேருந்தில் ஏறினாள். உட்கார இடமும் கிடைத்து விட்டது! உட்கார்ந்து விட்டாள்! பேருந்து கொஞ்சதூரம் சென்றவுடன் நிறையப் பயணிகள் ஏறினர். அனைத்து இருக்கையிலும் அமர்ந்தும் விட்டனர்! அடுத்த நிறுத்தத்திலும் சில பயணிகள் ஏறினர். வண்டியில் இடமே இல்லை. பலர் நின்று கொண்டுதான் பயணித்தனர்.
ரமாவின் அருகில் இரு பெண்கள். ஒருத்தி கர்ப்பிணிப் பெண்!..... மற்றொருத்தி கையில் குழந்தையுடன்!....ரமாவிற்குப் பாவமாக இருந்தது. ஆனால் இருவரில் யாருக்கு உதவி செய்வது?
கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் தந்துவிட்டுத் தான் எழுந்து நின்றாள். கர்ப்பிணிப் பெண்ணிற்கு குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்கும் பெண் மீது இரக்கம் ஏற்பட்டது! அவளிடமிருந்து குழந்தையை வாங்கினாள்! தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்!
இப்படித்தான் நடக்கும் என்று நினைத்து கர்ப்பிணிக்கு இடம் கொடுத்தாள் ரமா! அது போலவே நடந்து விட்டது! அவள் எண்ணம் நடந்தேறியதில் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது!
உதவி செய்வதிலும் ஒரு யோசனை வேண்டும் என தன் ஜவுளிக்கடைத் தோழிகளிடம் கூறினாள் அவள்.