அக்பர் ஒருநாள் காவலர்களுடன் வேட்டைக்குச் சென்றார். திரும்பும்போது இருள் சூழ்ந்துகொண்டது. திரும்பிச் செல்ல வழி தெரியாமல் தவித்தார். குழப்பத்தோடு போய்க்கொண்டிருந்த அக்பரின் பார்வையில் ஒரு பாதை தென்பட்டது. அந்தப் பாதையின் வழியே உரக்கப் பாடிக்கொண்டு வந்தான் ஒரு இளைஞன். அக்பருடன் வந்த காவலர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர்.
அக்பர் அந்த இளைஞனிடம், "உன் பெயர் என்ன?'' என்று விசாரித்தார்.
"மகேஷ்தாஸ்.... தங்கள் பெயர்?'' என்று பதிலுக்குக் கேட்டான் இளைஞன்.
பாதுஷாவுடன் இருந்தவர்கள், "சக்கரவர்த்தியுடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்!'' என்று இளைஞனிடம் பரபரப்பாக எடுத்துரைக்க.... கையமர்த்திய பாதுஷா, "என் பெயர் அக்பர். இந்துஸ்தானின் அரசன் நான்!... காட்டில் எங்களுக்கு வழி தவறிவிட்டது.... ஆக்ரா போக வேண்டும்.... இந்தப் பாதை எங்கு செல்கிறது?'' என்று வினவினார்.
மகேஷ்தாஸ் புன்னகையுடன், ""பாதை எங்கும் போகாது!.... அது இருக்கிற இடத்தில்தான் இருக்கும்!... சக்கரவர்த்தியாகவே இருந்தாலும் கூட போக வேண்டிய இடத்திற்கு நாம்தான் போக வேண்டும்!'' என்று கூறினான்.
அக்பருக்கு சிரிப்பு வந்துவிட்டது. தன் இலச்சினை மோதிரத்தை அந்த இளைஞனுக்கு அளித்து தன்னை ஆக்ரா வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுச் சென்றார்.
அதன்படி ஆக்ரா சென்ற அந்த இளைஞன் "பீர்பால்' என்ற பெயருடன் அக்பரின் உயிர்தோழனாக விளங்கினார்.
-ந. பரதன்