ஹம்சராஜ் உயிர்கள் மீது அன்பும், கருணையும் மிக்கவர். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார் அவர். அவர் இருந்த வீட்டிற்கு ஒரு முறை அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்ற சுனந்தர் என்ற சித்தர் பசியோடு வந்தார்.
அன்புடன் சுனந்தரை வரவேற்று உணவளித்து உபசரித்தார் ஹம்சராஜ்! விருந்தோம்பலும், இனிமையான பேச்சும் சுனந்தரைக் கவர்ந்தது. திருப்தியடைந்த அவர், ஹம்சராஜுவிற்கு உதவ நினைத்தார். கையை நீட்டி ஒரு கடல்சிப்பியை வரவழைத்தார். அந்தச் சிப்பியை ஹம்சராஜுவிடம் தந்து, ""இந்தச் சிப்பியை உடைத்து அதன் சதையைக் கிளறினால் உலகின் மிக உயர்ந்த முத்து உனக்குக் கிடைக்கும். நீ பெரும் பணக்காரனாவாய்! சுமார் பத்தாயிரம் பொற்காசுகள் மதிப்புள்ள முத்து இது!...'' என்றார்.
அதற்கு ஹம்சராஜ், சுனந்தரிடம், ""இந்த முத்து ஒரு லட்சம் பொற்காசுளை எனக்குப் பெற்றுத் தந்தாலும் எனக்கு இது வேண்டாம்.....முத்தை எனக்கு வழங்க அந்த சிப்பியை நான் கொல்ல வேண்டியிருக்கிறது....அது எங்கிருந்து வந்ததோ அங்கேயே அதை அனுப்பிவிடுங்கள்!..... பொற்காசுகளைவிட உயிரின் மதிப்பு மிக... மிக....மிக.... உயர்ந்தது! .... எந்த உயிருக்கும் தீங்கு செய்து, ஹிம்சை செய்து நான் வாழவோ, பொருளீட்டவோ விரும்பவில்லை!'' என்றார்.
உன்னைச் சோதிக்கவே நான் வந்தேன். நீ சந்தோஷமாக வாழ்வாய்...என் ஆசிகள்! என்று கூறி மறைந்தார் சுனந்தர்.
ஹம்சராஜ் அன்று முதல் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டார். மிக சந்தோஷமாக வாழ்ந்தார்.