தண்ணீர் தேடி தவளையொன்று
தத்திச் சென்றது - வெயில்
தணலைப் போலக் கொதித்ததினால்
தரையும் சுட்டது!
தங்க ஒண்ணா தரை சூட்டால்
தத்த முடியலே - சற்று
தங்கி ஓய்வு எடுத்துச் செல்ல
நிழலும் கிடைக்கலே...
சுற்றும் முற்றும் நிழலிருக்கா
என்று பார்த்தது! - கண்ணில்
சற்று தொலைவில் சிறதளவே
நிழலும் தெரிந்தது!
பாய்ந்து சென்று தவளையந்த
நிழலில் நின்றது! - பாம்பின்
படத்தின் நிழல் என்பதனைப்
பின்னர் அறிந்தது!
இறையருள்தான் இரையை எனக்கு
இங்கு கொணர்ந்தது - நன்றி
என்று பாம்பு தவளைதன்னைப்
பிடிக்கப் பார்த்தது!
எப்படியும் வெப்பத்தினால்
இறப்பது உண்மை - ஆனால்
அப்படி நான் இறப்பதனால்
யாருக்கு நன்மை? ...
இறக்கும் போதும் மற்றவர்க்கு
உதவ எண்ணியே - வந்தேன்
என்னை உண்டு வாழ்கவென்று
தவளை சொன்னது!
நல்ல உள்ளம் உள்ளவன் நீ
நல்லா வாழணும்! - உன்னை
நல்ல தண்ணீர்க் குளத்திலின்றே
நானே சேர்க்கணும்!
என்று நாகம் படத்தைத் தாழ்த்தி
தலையை காட்டிட - உடன்
நன்றி கூறி தவளை ஏறி
தலையில் அமர்ந்தது!
பாம்பு மெல்ல ஊர்ந்து சென்று
பக்கத்தில் உள்ள - நல்ல
பளிங்கு தண்ணீர்க் குளத்திலிட்டு
பார்த்து மகிழ்ந்தது!
பாம்பு அண்ணே! உங்களை நான்
என்றும் மறந்திடேன் - என்று
தேம்பி அழுது தவளையதற்கு
நன்றி சொன்னது!
பழகும்போது பாசத்துடன்
பழகிப் பாருங்க - நம்ம
பகைவர் கூட நண்பராக
மாறு வாருங்க!