பள்ளி மைதானம். அங்கு என்ன காரணத்தினாலோ ஒரு பணக்காரச் சிறுவனும், ஒரு ஏழைச் சிறுவனும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். ஏழைச் சிறுவன் சற்று பலகீனமாக இருந்தான். பணக்காரச் சிறுவன் பலமுள்ளவனாக இருந்தான். சண்டையில் பணக்காரச் சிறுவனே ஜெயித்தான்.
தூசியைத் தட்டிக்கொண்டு கீழே இருந்து எழுந்த ஏழைச் சிறுவன், பணக்காரச் சிறுவனை நோக்கி, ""உன்னைப்போல் எனக்கும் நல்ல சாப்பாடு கிடைத்திருந்தால் நான் உன்னை ஜெயித்திருப்பேன்....என்ன செய்வது?... நான் பலமற்ற ஏழை....ஒரு வேளை உணவுக்குக்கூட என் பெற்றோர் ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது!...'' என்றான்.
இதைக்கேட்ட அந்தப் பணக்காரச் சிறுவன் அதிர்ந்தான். இரக்கம் மேலிட அந்த ஏழைச்சிறுவனை அணைத்துக் கொண்டான்.
அன்று முதல் எளிய ஆடைகளையே அணிந்து கொண்டான். ....அன்று முதல் அவன் மாமிச உணவு, முட்டை அனைத்தையும் விட்டுவிட்டான்! எளிய காய்கறி உணவையே உண்டான்! எளிய வாழ்க்கையையே கடைப்பிடித்தான்.
வளர்ந்து விட்ட அந்தச் சிறுவன்....இதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். பின்னாளில் சிறந்த தத்துவஞானியாகவும், எழுத்தாளராகவும், மருத்துவராகவும், விளங்கினார்! 1952 இல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கூடக் கிடைத்தது!
எந்த உயிருக்கும் தீங்கிழைக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அவர்! அவர்தான் ஆல்பர்ட் ஸ்வைட்சர்!