தன் குரு விநய மகரிஷிக்கு மரியாதை செய்ய நினைத்தான் திவ்யபாலன். தன் கை நிறையக் காணிக்கைப் பொருட்களோடு பக்தியோடு குருவை நோக்கி விரைந்தான் அவன்.
சாம்பவன் என்ற யோகி விநய ரிஷியின் மீது பொறாமை கொண்டவன். காணிக்கைப் பொருட்களோடு குருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த திவ்யபாலனைப் பார்த்தான் சாம்பவன்.
""எங்கே செல்கிறாய்?''
""என் பிரிய குரு விநய மகரிஷியிடம் செல்கிறேன்...''
""கையில் என்ன?''
""அவருக்கு இந்த எளியேனுடைய காணிக்கை...''
""உன் குருவிற்கு எதுவுமே தெரியாது!.... நானோ பல யோகங்களைக் கற்றவன்....நீரிலும் நடப்பேன்....நெருப்பிலும் குளிப்பேன்...வானிலும் பறப்பேன்!....இதுவரை உன் குரு இது போன்ற அதிசயங்களை நடத்தியிருக்கிறாரா?.....அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி!..... அவரிடம் சென்று நீ எதையும் கற்றுக்கொள்ள இயலாது!....உன் நேரத்தை வீணாக்காதே!...அவர் எந்த அற்புதத்தையும் இதுவரை செய்ததில்லை!...''
""நான் ஏன் அவரை என் குருவாகக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?''
""ஏன்?...''
""அவர் பிறரைப் பற்றி ஒருபோதும் குறை கூறியதில்லை.... இதுதான் நீங்கள் சொன்ன எல்லா அற்புதங்களையும் விட அற்புதமானது!....என நான் நினைக்கிறேன்....அதனால்தான் அவரை மதித்து வணங்குகிறேன்....'' என்றான் சீடன்.
யோகி வெட்கத்தால் தலை குனிந்தார்.