அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர். ஒருமுறை அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே மருத்துவமனையில் படுக்கையில் இருந்தார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள்! மருத்துவமனையில் அவரைக் காண வந்தோர் நிறையப் பழங்களுடன் வந்தனர். பழங்கள் மலைபோல் குவிந்து விட்டன.
நடிகர் தன்னைக் காண வந்த மருத்துவரைப் பார்த்து, ""ஐயா எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்....'' என்று கேட்டார்.
""சொல்லுங்கள் என்ன வேண்டும்? ‘' என்று கேட்டார் மருத்துவர்.
""இங்கு இருக்கும் பழங்களையெல்லாம் பழச்சாறாகப் பிழிந்து இங்குள்ள நோயாளிகளுக்குத் தர ஏற்பாடு செய்ய முடியுமா? ‘' என்று கேட்டார்.
""அதற்கென்ன,.... செய்துவிடுவோம்...உங்களது இந்த எண்ணம் எவ்வளவு உயர்வானது!...'' என்றார் மருத்துவர்.
அதன்படியே பழங்கள் அனைத்தும் பழச்சாறாகப் பிழியப்பட்டு அங்குள்ள நோயாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. கடைசியாக நடிகருக்கும் ஒரு டம்ளர் ஜூஸ் தரப்பட்டது. அவர் அதை மகிழ்ச்சியுடன் அருந்தினார். நடிகருக்குப் பரம திருப்தி!
அந்த நடிகர்தான் சிரிக்க வைத்துச் சிந்தனையைத் தூண்டிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.