ஒருமுறை புத்தரைக் காணச் சென்றார் சீடர் ஒருவர். புத்தரை வணங்கிய அந்தச் சீடர், ""எங்கள் வழிகாட்டியே! உங்களைப் போன்று சிறந்த ஞானி வேறு யார் இருக்கிறார்கள்? உங்களைப் போல அன்பும் அருளும் ஒருங்கே கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்? உங்களைப் போன்று பெருமைக்குரியவர் யார் இருக்கிறார்கள்?'' என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்.
அவர் இவ்வாறு புகழ்ந்து கூறியதைக் கேட்ட புத்தர், ""சீடனே! எனக்கு முன்னால் தோன்றிய ஞானிகளைப் பற்றி உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சீடர், ""தெரியாது குருவே!'' என்றார்.
""இனி, எனக்கு அடுத்துத் தோன்றப் போகும் ஞானிகளையாவது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் புத்தர்.
அந்தச் சீடர் மீண்டும் ""தெரியாது குருவே'' என்று பதில் சொன்னார்.
""என்னையாவது நீ முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டார் புத்தர்.
அந்தச் சீடர் தலை குனிந்தபடி ""இல்லை குருவே!'' என்றார்.
""பின் எதற்கு அலங்காரமான புகழ்ச்சிச் சொற்களால் என்னைக் குறிப்பிட்டாய்? அவற்றால் எந்தப் பயனும் இல்லை'' என்றார் புத்தர்.
சீடர் தலைகுனிந்தபடி நின்றார்.