ஸ்கூல் புக்ஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க....யூனி ஃபார்ம் எல்லாம் தைத்து வந்தாச்சு! இந்த வருஷம் நான் புதுசா ஸ்கூல் பேக் வாங்கலே.... என்னோட பழைய பேக்கே நல்லாத்தான் இருக்கு! ஸ்கூல் திறக்க இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குது! ரகுவுக்கும் எனக்கும் பரபரப்பா இருந்தது! லீவை எப்படி சந்தோஷமா எதிர்பார்த்தோமோ அதே மாதிரி பள்ளிக்கூடம் போகவும் ரொம்ப ஆவலா, ஆசையா இருந்தது!
சாயங்காலம் அப்பா பிரவுன் ஷீட் வாங்கிக்கிட்டு வந்தார். ஜானகி சித்தியும், ராமு சித்தப்பாவும் உட்கார்ந்து என்னோட , ரகுவோட புதுப் புத்தகங்களுக்கெல்லாம் அட்டை போட்டாங்க! லேபிள் ஒட்டினாங்க! ஹப்பா! நிறைய புத்தகங்களும் நோட்டுக்களும் இந்தன. ""கொஞ்சம் இன்னிக்குப் போட்டுட்டு மீதியை நாளைக்குப் போட்டுக்கலாமா?'' அப்பிடீன்னு சொன்னேன் நான். சித்தப்பாவும், சித்தியும் உற்சாகமாக எல்லா புத்தகத்துக்கு அட்டை போட்டு முடிச்சிட்டாங்க.... மீதி இரண்டு பிரவுன் ஷீட் பாக்கி இருந்தது! அதை என்ன செய்யலாம்னு நான் கேட்டேன்!
""சுருட்டி வெச்சுடலாம்!.... அடுத்த வருஷம் உதவும்!'' என்றான் ரகு.
""என்னோட டைரிக்கு அட்டை போடலாமா?'' ன்னேன் நான்.
""உன்னோட டைரிதான் நல்லா தடிமனான அட்டையோட பிள்ளையார் படத்தோட இருக்கே!... அதுக்கு அட்டை போட வேண்டாம்'' அப்படீங்காங்க ஜானகி சித்தி.
""ஒண்ணு செய்யலாம்....அம்மாவோட ஸ்லோக புஸ்தகத்துக்கெல்லாம் அட்டை போட்டுடலாம்'' அப்படீன்னார் சித்தப்பா.
நான் ஓடிப்போய் ஸ்லோக புஸ்தகங்களை எடுக்கிட்டு வந்தேன். சித்தப்பா அட்டை போட்டார். இன்னும் கொஞ்சம் பிரவுன் ஷீட் மீதி இருந்தது.
சித்தப்பா உள்ளே போய் ஒரு திருக்குறள் புத்தகம் எடுத்துக்கிட்டு வந்தார். அதுக்கும் அட்டை போட்டார். அட்டையின் மேல் கொட்டையாக "திருக்குறள்' னு எழுதினார்.
கீழே ஒரு குறளையும், அதற்குப் பொருளையும் எழுதினார். அந்தக் குறளும், பொருளும் என்ன தெரியுமா?
"கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.''
-ஒருவனுக்கு அழிவில்லாத ஈடிணையில்லாத சிறப்பான செல்வம் கல்வியாகும். அதைவிடச் சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
அற்புதமான அழகான குறள்!
""ரகு அட்ட டைம்லே எல்லாத்துக்கும் அட்ட போட்டுட்டீங்க!'' அப்படீன்னான்.
எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தோம்!
அகில் குட்டி!