பாராட்டுப் பாமாலை! 59
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
திருவண்ணாமலை நகர் தன்னில்
வேட்டவலம் செல்லும் சாலையிலே
"திரு வள்ளுவர் அகம்' எனும் இல்லத்தில்
திருப்பணி ஒன்றைச் செய்பவராம்!
திருக்குறளார் சாமிநாதன் மகளென்று
தினமும் உறவினர் அழைப்பதனைப்
பெருமையாய் நினைத்திடும் "தமிழ்ச்செல்வி'
பேசும் பேச்செல்லாம் திருக்குறளே!
"வாழ்க்கைத் துணை நலம்' எனும் பொருளில்
வள்ளுவர் கூறிடும் வழிதனிலே
வாழ்ந்திடும் பெண்மணி தமிழ்ச் செல்வி
வளர்ந்திடும் பேர்க்கெலாம் உதாரணமாம்!
குறள்நெறி கற்றுக் கொடுத்திட்ட
கொள்கைப் படியே தினந்தோறும்
அறம், பொருள், இன்பக் கருத்துக்களை
அறுபத்திரெண்டு வயதிலும் பரப்புகின்றார்!
"விபத்தில் சிக்கி மறுபிறவி
எடுத்தது குறள் நெறி பரப்ப' என
சபதம் எடுத்துச் செய்வதனால்
"தமிழ்ச் செம்மல்' விருதும் பெற்றுள்ளார்!
...."வள்ளுவர்க்கோர் மணி மண்டபத்தை
வடித்திட வேண்டும் அரசு'....என
உள்ளம் உருகி அவரும்தான்
உயர்ந்த நோக்குடன் வேண்டுகிறார்!
....அரசும் அவரது ஆசைப்படி
அமைத்துக் கொடுக்கும்.... நம்பிடுவோம்!
அரசையும், அவரையும் பாராட்டி
அனைவரும் குறள்வழி நன்றி சொல்வோம்!
- அ.கருப்பையா
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...