பெரிய மனசு!
வேலை போய்விட்டது! நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்!
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு செய்தித்தாள்களை ஒரு சிறுவன் விற்றுக் கொண்டிருந்தான்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். அதில் வேலை வாய்ப்புச் செய்திகளை பார்வையிடலாம் என எனக்குத் தோன்றியது. ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. ஏக்கமாக செய்தித்தாள்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்! என்னை, செய்தித்தாள்களை விற்கும் அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் இரவல்
வாங்கிப் படிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது!
எப்படியோ அந்தச் சிறுவன் என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
"என்னிடம் சில்லறை இல்லை'' எனக் கூறினேன்.
அவன், "பரவாயில்லை, இலவசமாகக் கொடுக்கிறேன்'' என்றான்.
வேலை தேடிக்கொண்டிருந்தேன்.....மூன்று மாதங்கள் ஆனது.... நான் அந்தச் சிறுவனின் கடைக்குச் சென்றேன். என்னிடம் அன்றும் காசு இல்லை! மறுபடியும், அதே கதை நடந்தது! அந்தச் சிறுவன் புன்னகையுடன் நாளிதழை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன்.
அவன், "கவலைப்படாதீங்க..... எனக்குக் கிடைக்கும் இன்றைய லாபத்திலிருந்துதான் இந்தச் செய்தித் தாளைத் தருகிறேன்!.... வாங்கிக் கொள்ளுங்கள்!'' என்று கூறி செய்தித் தாளை என்னிடம் கொடுத்தான்.
19 ஆண்டுகள் கழிந்தன........
நான் பணக்காரன் ஆகிவிட்டேன்!.... சாதாரணப் பணக்காரன் அல்ல! உலகின் மிகப் பெரிய
பணக்காரன்! அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்து விட்டேன்!
அவனைப் பார்த்து, "என்னைத் தெரிகிறதா ?'' என்று கேட்டேன்.
"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ்!''
"பல ஆண்டுகளுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய்! நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்! தற்போது அதற்காக, நீ என்னவெல்லாம் விரும்புகிறாயோ, அவற்றைக்
கைம்மாறாகத் தர விரும்புகிறேன்!'' என்றேன்.
"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது!'' என்றான் அந்த இளைஞன்....
"ஏன் ?'' என்றேன் நான்.
அந்த இளைஞன், ""நான் ஏழையாய் இருந்த போது உங்களுக்குக் கொடுத்தேன்! ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்புதான் எனக்குக் கொடுக்க வருகிறீர்கள்! ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ?'' என்றான்.
அந்த இளைஞனுக்குத் தன்னைவிடப் பெரிய மனசு! என்பதை உணர்ந்தார் பில்கேட்ஸ்!
உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது கிடையாது. மனமிருந்தால் போதும்.
- ஜோ ஜெயக்குமார்