ஒரு காட்டில் இரவு நேரம்!
அண்டங்காக்கை ஒன்று மின்மினிப் பூச்சியைப் பிடித்துக்கொண்டது. தான் இனி அண்டங்காக்கையிடமிருந்து தப்ப முடியாது என நினைத்தது மின்மினிப்பூச்சி. தப்பிக்க ஏதாவது வழி செய்ய நினைத்தது! அதற்கு ஒரு யோசனை தோன்றியது.
மின்மினிப்பூச்சி அண்டங்காக்கையிடம், "நான் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்!.... நான் மட்டும் இங்கே தனியே வரவில்லை!..... இந்தக் காட்டில் என்னைப் போலவே நிறைய பூச்சிகள் இருக்கின்றன. அவற்றையும் நீ உணவாகப் பெறலாம்!.... நீ விரும்பினால் உனக்கு அந்த இடத்தைக் காட்டுவேன்!...'' என்றது.
"அப்படியா?.... சரி காட்டு!'' என்றது அண்டங்காக்கை.
"சரி என் பின்னாலேயே வா!'' என்று கூறி விட்டுப் பறந்தது மின்மினிப் பூச்சி. அதைப் பின் தொடர்ந்தது அண்டங்காக்கை. அந்தக் காட்டில் சற்று தூரத்தில் சிலர் கூடியிருந்தனர். மிகவும் குளிராக இருந்ததால் அவர் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்துகொண்டிருந்தனர். அந்த நெருப்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. நெருப்புப் பொறிகள் பறந்தன. மின்மினிப் பூச்சி அண்டங்காக்கையிடம், "அதோ அங்கே பார்!.... என்னைப் போலவே பல மின்மினிப் பூச்சிகள் பறக்கின்றன!.... போய்ப் பிடித்துக்கொள்!'' என்றது.
ஆர்வத்துடன் ஆசை, ஆசையாப் பறந்து தீப்பொறிகளை மின்மினிப் பூச்சி என்று நினைத்துத் தன் வாயால் அவற்றைப் பிடிக்க முயன்றது! அதன் வாய் தீப்பொறியினால் பொசுங்கியது! அலறிய அண்டங்காக்கை, "ஐயய்யோ!... இப்படி சுடுகிறதே!....இந்த மின்மினிப் பூச்சிகள் சாப்பிட உகந்தவை அல்ல!.... வாய் வெந்துவிடும் போலிருக்கிறதே!...'' என நினைத்தவாறு அப்பால் சென்றது.
தன்னை அழைத்து வந்த மின்மினிப் பூச்சியிடம், "இவ்வளவு சூடா இருக்கிற உன்னை யார் சாப்பிட முடியும்?.... ஆளை விடுப்பா!....'' என்று கூறிவிட்டுப் பறந்து சென்றது.
அன்றிலிருந்து அண்டங்காக்கை மின்மினிப் பூச்சிகளைப் பிடிப்பதையே விட்டுவிட்டது! மின்மினிப்பூச்சி விதியை மதியால் வென்றது!
மயிலை மாதவன்