டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்த போது திருப்பதிக்கு வருகிறார். திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல் வேளையில் தரிசனம் செய்வதற்குத் தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்கள் வெகு நேரம் தரிசனத்திற்காகக் காக்க நேரிடும் எனக்கருதினார். எனவே எவருக்கும் இடையூறு அல்லாத அதிகாலை வேளையில் தரிசனத்துக்கு வந்தார் அப்துல் கலாம் அவர்கள்.
ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற பல தரப்பினரும் சூழ, தேவஸ்தானம் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின் அவரை ஆலயத்துக்குள் வருமாறு அன்புடன் அழைத்தார்கள் அர்ச்சகர்கள்.
வரவேற்பை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார் அப்துல் கலாம். ஆனால் ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை! அங்கேயே நின்று கொண்டிருந்தார்! அனைவருக்கும் திகைப்பு!
பின்னர் பிரதான அதிகாரியைப் பார்த்து "பிற மதத்தவர்கள் கையெழுத்திட்ட பின்பே இந்த ஆலயத்திற்குள் நுழைய முடியும். அதுதான் இந்த ஆலயத்தின் விதி! அதற்கான குறிப்பேடு இங்குள்ளது. அதை எடுத்து வாருங்கள்! அந்தக் குறிப்பேட்டில் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் நான் ஆலயத்தில் நுழைய வேண்டும். இந்திய ஜனாதிபதி என்றாலும் அந்தக் கட்டுப்பாட்டை நான் மீற மாட்டேன்!
கூடியிருந்த அனைவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர். "இந்தப் பண்பு வேறு யாருக்கு வரும்' என்று ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் பதிவேடு கொண்டு வந்ததும் அதில் கையெழுத்திட்ட பின்னர் "பங்காரு வாகிலி " எனப்படும் தங்க வாசலைக் கடந்து ஏழுமலையானைத் தரிசித்தார் அப்துல் கலாம். அப்போது பாசுரங்கள் பாடப்படும் திருமலையின் சிறப்பு எடுத்துரைத்து, சடாரி சார்த்தப்பட்டது. வெளியே வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
ஆலயத்தை வலம் வந்தார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்! பிறகு அர்ச்சகர்கள் லட்டு, பட்டு வஸ்திரம், முதலியவைகளோடு பிரசாதங்களை ஆசி கூறும் வேத மந்திரங்கள் முழங்கக் கொடுத்தனர்.
அப்போது அவர் அர்ச்சகர்களைப் பார்த்து, " ஒரு நிமிடம்''... என்று சொல்லிவிட்டு, "தனிப்பட்ட முறையில் எனக்கென ஆசீர்வாதம் செய்வதைவிட, இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும். இந்திய மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்!...இந்தியாவில் உள்ள அனைவரும் சகல வளங்களையும் பெற வேண்டும்! என்று வாழ்த்தி இந்தப் பிரசாதத்தை என்னிடம் கொடுங்கள்!.... எப்படியும் ஆசிகள் இந்தியனாகிய என்னையும் சேர்ந்துவிடும்!...'' என்று சொன்னபோது அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
எப்பேர்பட்ட உயரிய சிந்தனை! நாட்டைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும் அப்துல் கலாம் அவர்களை நம் நினைவில் வைத்துப் போற்றுவோம்!!
ஜோ ஜெயக்குமார்