வாசலில் மாம்பழம் விற்கிற சத்தம் கேட்டது! ஒரு பெண்மணி தன் தோட்டத்திலிருந்த சிறந்த மாங்கனிகளைக் கூடையில் அடுக்கிக் கொண்டு கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள்! கண்ணனுக்கு மாம்பழம் சாப்பிட ஆசையாய் இருந்தது! அவன் வெளியில் சென்று அந்தப் பெண்மணியிடம் மாம்பழம் கேட்டான்.
""நீ எனக்கு மாம்பழத்திற்கு பதில் ஏதாவது தர வேண்டும்!.... தானியங்களோ, வேறு ஏதாவதோ எடுத்து வா! அப்பொழுதுதான் உனக்கு மாம்பழம் கிடைக்கும்! '' என்றாள்.
கண்ணன் உடனே வீட்டிற்குச் சென்று அரிசிப் பானையிலிருந்து தன் பிஞ்சுக் கைகளில் அள்ளி எடுத்துக் கொண்டு ஓடோடி வந்தான்!... வேகமாக ஓடி வந்ததால் கையிலிருந்த தானியங்களைச் சிந்திக் கொண்டே வந்தான்... கடைசியில் அவன் பழக்காரியை அடைந்த போது அவன் கைகளில் ஓரிரு தானியங்களே ஒட்டியிருந்தன. அவன் பழக்காரியைப் பாவமாகப் பார்த்தான்!
அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது!...சின்னஞ்சிறிய கைகளில் ஓரிரு தானியங்கள் ஒட்டியிருந்ததையும், கண்ணன் ஏக்கமாக மாம்பழத்தைப் பார்த்ததையும் கவனித்த பழக்காரி, கூடையை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு
மாம்பழங்களை அள்ளி அவனிடம் நீட்டினாள். தன் கையில் ஒட்டியிருந்த தானியங்களை கூடையில் கைகளைத் தட்டி உதறினான் கண்ணன். அந்த ஓரிரு தானியங்கள் பழக்காரியின் கூடையில் விழுந்தன.
கண்ணன் சந்தோஷமாக மாம்பழங்களைப் பெற்றுக்கொண்டு பழக்காரிக்கு நன்றி கூறினான்! தன் தோழர்களைக் கூவி அழைத்தான். பங்கு போட்டு உண்டான். பழக்காரியால் கூடையைத் தூக்க முடியவில்லை! அவள் கண்ணனை அழைத்தாள்!
கண்ணன் அவளிடம் வந்து, ""என்ன?'' என்றான்.
""கூடையைத் தூக்க முடியவில்லை!...''
""ஏன்?''
""தெரியவில்லை!...''
""கூடைத் துணியை விலக்கிப் பார்!... ''
பழங்களை மூடியிருந்த துணியை விலக்கிப் பார்த்த பழக்காரிக்கு ஆச்சரியத்தால் கண்கள் விரிந்தன!.... கூடையில் அத்தனையும் தங்க மாம்பழங்கள்!
பின்னே!.... பரம்பொருளின் தரிசனம் பெற்றவள் அவள்!... தன் மாம்பழங்களை நிவேதனம் செய்தவள் அவள்! அவளுக்கு எதுதான் கிடைக்காது!