எங்கள் குட்டிக் கிராமம்!
என்றும் நினைத்தால் இனிக்கும்!
எங்கும் பசுமைத் தோற்றம்!
மண்ணும் இங்கே மணக்கும்!
கோழி கூவும் விழிக்க.....
காகம் கரைந்து எழுப்பும்!
வாசல் நிறைந்த புள்ளிகளில்
வரைந்திருக்கும் கோலம்!
கண்ணா மூச்சி ஆடலாம்!
தென்னந்தோப்பில் ஒளியலாம்!
தென்னங்குரும்பை ஈர்க்குச்சியில்
தேரும் செய்து இழுக்கலாம்!
உப்புக் கோடு பாயலாம்!
ஓட்டப்பந்தயம், கோலாட்டம்,....
கிட்டிப்புல்லு, சடுகுடு,.....
கோலி அடித்தும் ஆடலாம்!
சில்லு ஆட்டம், பம்பரம்,....
நொண்டிக் கோடும் இங்குதான்!
பல்லாங்குழியும், தாயமும்,....
பகலும், இரவும் ஆடலாம்!
ஆற்றங்கரையின் நெடுகிலும்,
ஆலும், அரசும், நாவலும்
பூத்துக் குலுங்கும் கொன்றையும்
போவோர் தம்மை மயக்கும்!
ஆலம் விழுதே ஊஞ்சலாம்!
ஆடிப்பாடும் சிறுவராம்!
நீலக்குயிலும் பாடுமே!
நெளிந்தே ஓடும் நீருமே!
அய்ய னாரு குளத்திலே
அழகுத் தாமரை சிரிக்குமே!
அல்லி பூத்த ஏரியில்
உள்ளான், கொக்கு பறக்குமே!
வீட்டில் இரவு உண்டதும்
விரித்த பாயில் படுத்துமே
பாட்டிக் கதைக்கு "ஊம்' போட்டு
படுத்துத் தூங்கினால் சொர்க்கமே!
புலேந்திரன்