குரங்கு பொம்மை!
ராமு 2 வயதுக் குட்டிப் பையன். அவனிடம் ஒரு குரங்கு பொம்மை இருந்தது. அதைத் தூக்கிக்கொண்டே அலைவான்.அதனிடம் பேசுவான். கதை சொல்லுவான். பாடுவான். ஒரு நாள் ராமு தன் பெற்றோர், மற்றும் பாட்டியுடன் அவனுடைய பெரியம்மா வீட்டிற்குச் சென்றான். அவன் குரங்கு பொம்மையை விடவில்லை. அதையும் எடுத்துக் கொண்டுதான் போனான். போகும் வழியெல்லாம் அதனுடன் கொஞ்சிக் கொண்டு வந்தான். எல்லோரும் ராமுவின் பெரியம்மா வீடு போய்ச் சேர்ந்தார்கள். அங்கு பெரியம்மாவின் பத்து மாதக் குழந்தை மீரா என்ற அவனது தங்கை இருந்தாள்.
மீரா பாப்பாவுக்கு ராமுவின் குரங்கு பொம்மையை விளையாடுவதற்கு சிறிது நேரம் கொடுத்தான். மீராவுக்கு ராமு வைத்திருந்த குரங்கு பொம்மையை ரொம்பவும் பிடித்து விட்டது! மீரா குரங்கு பொம்மைக்கு முத்தம் கொடுத்தாள்! தன் மழலை மொழியில் அதனுடன் பேசினாள். ராமுவுக்கு மீராவைப் பார்த்தால் சிரிப்பாக வந்தது.
சிறிது நேரம் ஆனவுடன் ராமுவின் அம்மா விடை பெற்றுக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார். ராமனுக்கு அந்தக் குரங்கு பொம்மை மிகவும் பிடித்தமானது என்பதால் அதைத் திருப்பிக் கொடுக்கும்படி ராமுவின் அம்மா கேட்டார்.
மீரா, குரங்கு பொம்மையை அணைத்துக் கொண்டு உடலைத் திருப்பியபடி தரமாட்டேன் என்று அடம் பிடித்தாள். வற்புறுத்தி அம்மா அதைக் கேட்டபோது அழ ஆரம்பித்து விட்டாள்!
""சரி ராமு, குழந்தைகிட்டேயே அந்த பொம்மையைக் குடுத்துடு!'' என்றாள் ராமுவின் அம்மா. ராமனும் சந்தோஷமாக அந்த பொம்மையை மீராவிடம் கொடுத்து விட்டான். அவனுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? குழந்தை அழுகிறாள்! தனக்கு இல்லை என்றாலும் பரவாயில்லையென்று அதை மீராவிடமே கொடுத்துவிட்டான். ராமுவின் அப்பாவும், பாட்டியும் ராமுவின் விட்டுக்கொடுக்கும் குணத்தைப் பாராட்டினார்கள். எல்லோரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.
அதே மாதிரி குரங்கு பொம்மையை வாங்கித்தருவதாக அவனிடம் சொன்னார் ராமுவின் அப்பா. ஆனால் அதே மாதிரி குரங்கு பொம்மை அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. பல கடைகளில் விசாரித்தார் ராமுவின் அப்பா! ம்ஹூம் அதே போல் ஒரு குரங்கு பொம்மை கிடைத்த பாடில்லை!
ஒரு மாதம் கழிந்தது. ராமுவின் சித்தப்பா பூனாவிலிருந்து வந்திருந்தார். சித்தப்பா எல்லோருக்கும் இனிப்புகள், அப்பாவுக்கு ஸ்வெட்டர், எல்லோருக்கும் துணிமணிகள், பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அவர் ராமுவுக்கு ஒரு பரிசுப் பொருள் அடங்கிய ஒரு பெட்டியைத் தந்தார்.
அதைத் திறந்து பார்த்தபோது ராமு, ராமுவின் பெற்றோர், பாட்டி எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர்!
அதுதான் மீராவுக்கு ராமு சந்தோஷமாக அளித்த அதே போன்ற குரங்கு பொம்மை! ராமு சித்தப்பாவைக் கட்டிக்கொண்டு முத்தம் தந்தான்.
""அன்னைக்கு நீ மீராவுக்கு சந்தோஷமா உன் பொம்மையைக் குடுத்தே இல்லே!.... அதுக்கு கடவுள் தந்த பரிசு இது!'' அப்படீன்னாங்க பாட்டி.