ஒரு காட்டில் ஜம்பு என்ற யானையும், ஜக்கி என்ற நீர் யானையும் ரொம்ப நட்பா இருந்தன. எங்கு போனாலும் சேர்ந்தே சென்றன. சேர்ந்தே உணவருந்தின.
ஒரு நாள்... ஜம்புவும், ஜக்கியும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது டாமு என்ற ஆமை வந்தது.
""என்ன செளக்கியமா?'' என்று ஜம்புவையும், ஜக்கியையும் விசாரித்தது.
""செளக்கியம்!.....நீ எப்படி இருக்கே! டாமு!...'' என்று ஜம்பு கேட்டது.
""ம்ம்....செளக்கியம்தான்.... நீங்க ரெண்டு பேரும் உருவத்திலும், பலத்திலும் பெரியவர்கள்தான்!.... ஆனால் உண்மையில் உங்கள் இருவரையும்விட நான்தான் பலசாலி!'' என்று சொன்னது டாமு.
ஜம்புவும், ஜக்கியும் ஒன்றை ஒன்று பார்த்து முறுவலித்தன.
""என் வார்த்தை உங்களுக்கு கேலியாகத் தோன்றுகிறதா?.... இதோ!... ஒரு வலுவான நீண்ட கயிறு. ஜம்பு அங்கிள்!..., இந்த கயிற்றின் ஒரு முனையை நீங்க பிடிச்சுக்கோங்க.... மறுமுனை என்னிடம் இருக்கட்டும்!.... என்னை நீங்க நீருக்குள்ளிருந்து வெளியே இழுத்து விடுங்கள்...பார்க்கலாம்!'' என்றது ஆமை.
ஜம்புவுக்கு மகா கோபம்!... இந்த இத்தூனூண்டு ஆமை நம்மகிட்டே சவால் விடுவதா?...... ""சரி!...'' என்று கயிற்றின் ஒரு முனையை தும்பிக்கையால் பிடித்துக் கொண்டது.
டாமுவும் மறுமுனையைத் தன் காலில் கட்டிக்கொண்டு நீரில் இறங்கியது. நீருக்குள் இறங்கியதும் தன்கால் கட்டை அவிழ்த்து அங்கிருந்த ஒரு பெர்ய பாறையில் கயிற்றை நன்றாக இழுத்துக் கட்டியது.
ஜம்பு மேலிருந்து ஆனமட்டும் இழுத்துப் பார்த்தது! ம்ஹூம் அதனால் முடிவில்லை!!.... கயிறு படாரென்று அறுந்தது! உடனே டாமு பாறையிலிருந்து கயிற்றை அவிழ்த்துத் தன் காலில் கட்டிக்கொண்டு மூச்சு வாங்க அறுந்த கயிறு ஊசலாட மேலே வந்தது !
ஜம்பு தொங்கிய தலையுடன் டாமுவிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டது. ஆனால் ஜக்கி ஒப்புக்கொள்ளவில்லை..... நீர்யானை ஜக்கி டாமுவிடம், ""எங்கே,.... கயிற்றை இப்படிக் கொடு!.... இப்போது நான் நீருக்குள் போகிறேன்.... நீ மேலே இரு!.... உன்னைத் தண்ணீருக்குள் இழுத்துத் தள்ளி விடுகிறேன்!....'' என்றது.
உடனே டாமு, ""சரி!...'' என்று கூறிவிட்டு புதிய கயிற்றைக் கொண்டு வந்தது. ஒரு முனையைத் தன் காலில் கட்டிக்கொண்டது. நீண்டு வளர்ந்திருந்த புல் அடர்ந்த காட்டுக்குள் நகர்ந்தது. மறு முனையுடன் ஜக்கி நீருக்குள் குதித்தது. ஜக்கி மறைந்ததும் டாமு அருகில் இருந்த ஒரு பனைமரத்தைப் பல தடவை சுற்றி வந்தது. ஜக்கி இழுத்தபோது, கயிறு பனை மரத்தை நன்றாக இறுக்கிக் கொண்டது. எத்தனை இழுத்தும் டாமு தண்ணீருக்குள் வரவில்லை!....மூச்சுத் திணற மூக்கிலிருந்த தண்ணீர் வழிய கரைக்கு வந்தது. உடனே டாமு பனைமரத்தை கயிறு விடும்படியாக மாறிச் சுற்றியது. கயிறு விடுபடக் கால் கட்டோடு ஜக்கியிடம் வந்தது.
ஜக்கியால் பேசக்கூட முடியவில்லை....அத்தனை களைப்பு அதற்கு....தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தன் தோல்வியை ஒப்புக்கொண்டது.
ஆனால் டாமுவுக்கு மனசு கேட்கவில்லை..... தான் செய்த தந்திரத்தை அவைகளிடம் சொல்லிவிட்டது.
ஜம்புவும், ஜக்கியும் தாங்கள் ஏமாந்ததை எண்ணி வெட்கத்துடன் சிரித்தன.
""இத்தூனூண்டு டாமுவுக்கு எவ்வளவு புத்தி!'' என்று டாமுவைப் பாராட்டித் தங்களது மிக நெருங்கிய நண்பனாகக் கருதின.