சாக்லேட்!அப்பா வேலையிலேர்ந்து வந்தார். நானும் தம்பி ரகுவும் ""அப்பா வந்தாச்சு!...'' ன்னு கத்தினோம். அப்பா சிரித்துக் கொண்டே பையில் கையை விட்டார். ரெண்டு சாக்லேட்! நான் ""ஹை!...'' என்றேன் சந்தோஷத்துடன்!
எனக்குப் பிடிச்ச காட்பரீஸ் சாக்லேட்! எனக்கு ஒண்ணும் தம்பிக்கு ஒண்ணும் தந்தார். நாங்க ரெண்டு பேரும் மாடிக்குப் போனோம்! பால்கனியிலே நின்னுக்கிட்டோம்! அதைப் பிரிச்சுச் சாப்பிடலாம்னு நான் சாக்லேட்டைப் பிரிச்சேன். மெல்லமா ஜரிகைப் பேப்பரைப் பிரிச்சேன்.....உள்ளே இருக்கிற சாக்லேட்டை எடுத்தேன்!.... ஆனா அது கை நழுவிக் கீழே விழுந்து விட்டது! மாடியிலிருந்து கீழே!...சாக்லேட்டெல்லாம் மண்ணாயிருக்கும்!.... எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்தது!....தம்பி ரகு இதைப் பார்த்துக்கிட்டே இருந்தான். நான் ரொம்ப வருத்தமா இருக்கறதை கவனிச்சிட்டான்.
""இந்தாக்கா!...'' ன்னு அவனோட சாக்லேட்டை எங்கிட்டே கொடுத்துட்டான்! எனக்கு ரொம்ப சந்தோஷமாவும், ஆச்சரியமாவும் இருந்தது!
நான் சாக்லேட்டை வெச்சிக்கிட்டு அவன் கீழே போட்டிருந்தால்!.... நான் என் சாக்லேட்டை பாதியா பிட்டு ஷேர் பண்ணியிருப்பேன்!...ஆனா ரகு மாதிரி அப்படியே சாக்லேட்டை முழுசா கொடுத்திருப்பேனா?....தெரியலே.... ரகு மனசை ரொம்ப நெகிழ வெச்சுட்டான். நான் சாக்லேட்டை ரெண்டா பிட்டு அவன் வாயில் ஊட்டினேன்! நானும் சாப்பிட்டேன்!
இன்னிக்கு நடந்த இந்த சம்பவம் எனக்கு சாக்லேட் சாப்பிடுவதைவிட ரொம்ப இனிமையா இருந்தது. இரவு ரகு தூங்கும்போது அவன் பக்கத்தில் படுத்துக்கிட்டு அவன் கன்னத்தைத் தடவினேன்! ரகு நன்றாகத் தூங்கறான்!நானும் தூங்கப் போறேன் இந்த டைரியை எழுதிட்டு!