பாரதியார் மீது பெரிதும் அன்பு கொண்டவர் பாரதிதாசன். அவர் ஒரு நாள் பாரதியாரிடம் சென்று, "தமிழ்நாடு என்ற தலைப்பில் கவிதைப் போட்டி ஒன்று நடக்கிறது. அதற்குத் தாங்கள் ஒரு கவிதை எழுத வேண்டும்...'' என்று கேட்டார்.
பாரதியார் போட்டிக்குக் கவிதை எழுத மறுத்துவிட்டார். "உனக்காக வேண்டுமானால் பாடுகிறேன்.... போட்டிக்கெல்லாம் என்னால் பாட முடியாது!...'' என்றார்.
"சரி எனக்காகப் பாடுங்கள்!...'' என்றார் பாரதிதாசன்.
பாரதியார் தமிழ்நாட்டின் மீது ஒரு பாடலைப் பாடினார். பாடினார் என்றால் அப்படியே பாட்டாகப் பாடுவார். வார்த்தைகள் வெள்ளம் போல வரும்! பாரதி பாடப் பாட பாடலை எழுதிக்கொண்டார் பாரதிதாசன். அதோடு அவர் பாரதியாரிடம் சொல்லாமல் அந்தப் பாடலைப் போட்டிக்கும் அனுப்பிவிட்டார்.
போட்டியில் பாரதியார் பாடலுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. முதல் பரிசு பெற்ற கவிதை எது என்று நமக்குத் தெரியாது. இன்று அதை நாம் தேட வேண்டியிருக்கிறது. ஆனால் இரண்டாம் பரிசு பெற்ற மகாகவியின் கவிதை தமிழக மக்களின் உள்ளத்தில் நிலைத்து நின்றுவிட்டது. "செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்று துவங்கும் பாடல்தான் அது!
நெ.இராமன்.