முகநூல் நண்பர்கள் பலர்சேர்ந்து
முயற்சி ஒன்றை மேற்கொண்டார்
அகமும், புறமும் மலர்த்திடவே
அன்பாய் நற்பணி செய்கின்றார்
உறவுகள் கைவிட்ட பேர்களுக்கும்
உடலால் சோர்ந்த முதியவருக்கும்
மருத்துவமனைகளை விட்டு வந்து
மறுபடி நோயுறும் மக்களுக்கும்,
இறக்கும் நிலையில் உள்ளவருக்கும்
இருப்பிடம் இன்றித் தவிப்பவருக்கும்
சிறப்பாய் ஏற்ற உணவளித்து
சேவை செய்கிறார் இளைஞரெலாம்
சுரபி என்னும் ட்ரஸ்ட்டுடனே
சுறுசுறுப்பாக இணைந்தேதான்
தாய்மடி என்னும் இல்லத்தில்
தங்க வைத்து உயிர் காப்பார்!
ஆதரவு இல்லா அனாதைகளை
அறிந்தவர் தகவல் தந்திட்டால்
உடனே சென்று அழைத்து வந்து
உதவிகள் செய்தே வருகின்றார்!
தாங்கள் பெறுகின்ற ஊதியத்தைத்
தர்மம் செய்கிறார். ஏழைகளைத்
தாங்கும் தாய்மடி இல்லத்தின்
தரத்தை உயர்த்தவும் எண்ணுகிறார்!
அன்னையைப் போலொரு தெய்வமில்லை அவர்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை
என்னும் திரை இசைப்பாடலினை
இதயத்தில் சுமந்து தினந்தோறும்,
தொண்டு செய்யும் இளைஞர்களின்
தோள்களைத் தட்டி ஊக்குவித்து
கண்டோர் கேட்டோர் யாவருமே
கருத்தாய்ச் சொல்வோம் பாராட்டு!