சொல்லாமல் சொல்லும் இயற்கை!
இளந்துறவி ஒருவர் அந்நகருக்கு வந்தார். சிறிய வயதிலேயே அவருடைய ஞானம், பேச்சு, அறிவுரை ஆகியவைகள் மிக அற்புதமாக இருந்ததால் எல்லோருக்கும் அவர் மீது ஈடுபாடும், ஈர்ப்பும் வந்தது.
இளந்துறவி எந்த ஒரு நல்ல விஷயத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும்போது இயற்கையோடு அதை இணைத்து மனதில் பதியுமாறு விளக்குவார்.
அன்று அவருடைய அறிவுரையைக் கேட்க நல்ல கூட்டம் சேர்ந்திருந்தது. கூட்டத்தினரைப் பார்த்து, "இரட்டையர்களாகப் பிறந்த ஒருவன் நல்லவனாகவும், மற்றொருவன் கெட்டவனாகவும் ஆக முடியுமா என்று பார்க்கலாமா? '' என்று கேட்டு விட்டு பேச்சைத் தொடங்கினார்.
"இயற்கை நமக்கு வாழ்க்கையின் பல உண்மைகளை சொல்லாமல் சொல்லித் தருகிறது!.... அதிலிருக்கும் நுட்பமான யதார்த்தத்தை மக்கள் கிரகித்துக் கொண்டு விட்டால் அவர்கள் தெளிவு பெற்றுவிடுவார்கள். உதாரணத்திற்கு இன்று ஒன்றை எடுத்துக் கொள்வோம்...... கார் மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டத் தொடங்குகிறது!.... நல்ல சுவையான மழை நீரின் ஒரு பகுதி நீர்நிலையிலும், ஆற்றிலும், குளத்திலுமாக விழுகிறது. மற்றொரு பகுதி பரந்த கடல் பரப்பில் விழுகிறது. கடலில் விழுந்த சுவையான மழை நீர் உப்புக் கரிக்கிறது. ஆனால் மற்ற பகுதிகளில் விழுந்த மழை நீர் உப்புக் கரிப்பதில்லை. சுவையாக இருக்கிறது. இப்படித்தான் ஒருவன் சேரும் இடத்தைப் பொறுத்து நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறி விடுகிறான். நமக்கு இது போன்ற பல பேருண்மைகளை இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது.
இளந்துறவி இயற்கையை இணைத்துக் கூறியது பசுமரத்தாணியாய் எல்லோருடைய மனதிலும் பதிந்தது!
- நா.கிருஷ்ணமூர்த்தி