அடர்ந்த காடு ஒன்றின் நடுவிலிருந்த நீர் நிலையில் ஓர் ஆமை வசித்து வந்தது. அந்த ஆமைக்கு இரண்டு கொக்குகள் நண்பர்களாக இருந்தன.
ஒரு நாள் அந்த நீர்நிலை மிகவும் வற்றிப் போய்விட்டது. ஆமை வேறு நீர் நிலைக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, ஆமை கவலையுடன் இருந்தது.
அப்போது இரண்டு கொக்குகளும் அங்கு வந்தன. ஆமை நண்பனின் கவலைக்கான காரணம் அறிந்தன. இறுதியில் ஒரு கொக்கு யோசனை கூறியது.
""ஆமை நண்பனே! நாங்கள் இருவரும் நீண்ட கொம்பை ஆளுக்கொரு முனையாகப் பிடித்துக் கொள்வோம். நீ அந்தக் கொம்புக்கு நடுவிலே பிடித்துக் கொள். நாங்கள் பறந்து சென்று உன்னை நீர் நிறைந்த சுனை ஒன்றில் இறக்கி விடுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் உன்னை இறக்கிவிடும் வரை நீ வாய் திறக்கக் கூடாது. வாயைத் திறந்தால் உனக்கு மரணம்தான்'' என்றது.
ஆமை மகிழ்ச்சியாக அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டது. வானவெளியில் ஆமையுடன் கொக்குகள் பறக்கத் தொடங்கின.
இந்த வினோத ஊர்வலத்தைக் கண்ட சிறுவர்கள் ஆரவாரம் செய்தார்கள். இதைக் கண்ட ஆமைக்குக் கோபம் வந்தது. சிறுவர்களைத் திட்டுவதற்காக வாயைத் திறந்தது. கொம்பிலிருந்து விடுபட்டு "பொத்' தென்று கீழே விழுந்தது. ஆமையின் உடல் சிதறியதால் மரணமடைந்தது. அதைக் கண்ட கொக்குகள் வருத்தம் அடைந்தன.
"கோபம் உயிரை இழக்க வைக்கும்; பொறுமை உயிரை பேணிக் காக்கும்' என்பது ஆமைக்கு ஏனோ தெரியவில்லை.