பள்ளிக்கூட விடுமுறையில்
படிப்பிற்கு ஒய்வு தந்திடுவர்!
துள்ளிக் குதித்து விளையாடச்
சிறுவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்திடுவர்!
விடுமுறை நாள்தான் அவர்களது
விடுதலை நாளென மகிழ்ந்திடுவர்!
சடுகுடு பம்பரம் சதுரங்கம்
சகலமும் அங்கே அரங்கேறும்!
கோடை வெயிலும் சதமடிக்க
குளிர் நிலவென்றே அதையெண்ணி
ஆடுவர் மட்டைப் பந்தாட்டம்
ஆனந்தம் அங்கே களைகட்டும்!
காலை வந்தால் சுட்டெரிக்கும்
கட்டாந் தரையில் ஒரு கூட்டம்
கால் பந்தாட்டம் ஆடிடுமே
கவலை சிறிதும் இல்லாமல்!
பால்மனச் சிறுவர்கள் விளையாட்டைப்
பகலவன் வெயிலும் தடுத்திடுமா?
தோல்வியை அறியா அவர்களிடம்
தோற்றுப் போகும் சூரியனே!
வேல்கொண்டு தாக்கும் வெயிலிலே
விளையாடுவதற்கு சிறுவர்களே!
மாலை நேர விளையாட்டே
மனத்தையும் உடலையும் பொலிவாக்கும்!
கதையும் பாட்டும் படித்திடுவீர்
காலைப் பொழுதைக் கழித்திடுவீர்!
மதியம் சிறிது ஓய்வெடுப்பீர்
மாலையில் ஆடி மகிழ்ந்திடுவீர்!
பாரதி சொன்னதைக் கேட்டிடுவீர்
பகலில் ஆட்டம் தவிர்த்திடுவீர்!
சீருடன் உடலைக் காத்திட்டால்
சிறந்த சிறுவர்கள் நீங்கள்தான்!
-கடலூர் நா. இராதாகிருட்டிணன்