ஆண்டுதோறும் "மனித நேய' நாளென்றே
ஆகஸ்டு பத்தொன்பதாம் நாளில்
மனித நேயம் என்றென்றும் தழைத்திடவே
மகத்தான செயல் புரிந்தான் ஒரு சிறுவன்!
அவன் பெயர் வெங்கடேசன் என்பதுவே
அவன் வயது பன்னிரெண்டு தான் நடப்பு!
அருகிலுள்ள கர்நாடக மாநிலத்தின்
ராய்ச்சூர் எனும் மாவட்டம் என்பதுவே!
"ஹிரோனா கும்மே' எனும் கிராமம்தாம்!
பெருமழையின் மிகுதியினால் தெருக்களிலே
பெருக்கெடுத்த நீர் சாலை மறைத்ததுவே!
போக்கு வரத் தெல்லாம் நின்றதுவே!
பெருமழையால் சாலை வழிப் பாலமது
தெரியாமல் மூழ்கியதே!...பொதுமக்கள்
நெருக்கடிக்கு உதவுகின்ற ஆம்புலன்சு - வழி
அறியாமல் தவித்ததனைக் கண்ட சிறுவன்....
..... நேர்த்தியுடன் நீரிடையே முன் நடந்தே
ஆம்புலன்சு ஓட்டிடவே வழி காட்டி
நடந்தானே!.... பார்த்திடவே பதறும் நெஞ்சம்!
நடந்ததிது! உண்மை இது! நம்பிடுங்கள்!
மனித நேயம் மிக்க இந்தச் செயலினையே
மாவட்ட நிர்வாகம் பாராட்டியே
மனிதத்தோடு சுதந்திரத் திரு நாளினிலே
வெங்கடேசைப் பாராட்டி மகிழ்ந்ததுவே!
தேசியத்தின் அளவிலும் அச் சிறுவனுக்கே
தேர்ந்து ஒரு விருதளித்துப் பாராட்ட
ஆசி தந்து பரிந்துரையும் செய்ததுவே
அச்சிறுவன் வெங்கடேசன் வாழியவே!
மனித நேயம் மீண்டதுகாண் சிறுவனவன்
மகத்தான ஓர் உதவி துணிச்சலோடு
புனிதமாகச் செய்ததனால் அவனுக்குப்
பண்புடனே புகழ் மாலை சூட்டிடுவோம்!