பாராட்டுப் பாமாலை! - 56: வாசிக்க வைத்த யசோதா வாழ்க!
கொச்சியிலுள்ள மட்டஞ்சேரிப்
பகுதியில் ஓர் அழகிய வீட்டில்
பனிரெண் டகவை நிறைந்த "யசோதா!'
பாமரர் அனைவரும் படித்தே பயனுற
நனி சிறப்பாக நூலகம் ஒன்றை
நன்கு தொடங்கி நடத்திடுகின்றாள்!
அகமகிழ்ச்சியோடு மக்கள் பலரும்
அடிக்கடி வந்து சென்றி ருப்பர்!
படிப்பதில் ஆர்வம் கொண்டவர் அப்பா!
புத்தகம் வாங்கச் செலவும் செய்வார்!
படித்துவிட்டுத் திருப்பித் தரவும்
பணத்தைக் கொடுப்பதைப் பார்த்தாள் யசோதா!
பணமில்லாதோர் எப்படிப் படிப்பார்?
என்ற கேள்வி யசோதா மனதில்!.....
சொந்தச் செலவில் அமைத்தார் நூலகம்!
சகலரும் படித்திட வழிவகை செய்தார்!
காலை ஏழு மணி முதல் இரவு
ஏழு மணி வரை சென்று படிக்கலாம்!
அமர்ந்து படித்திட இடமும் உண்டு!
அருமை மிகுந்த நூல்களுமுண்டு!
கட்டணம் ஏதும் இதற்கில்லை!
கருத்தாய்ப் படித்துப் பயனுறலாமே!
எங்கும் நிசப்தம்! அமைதிச் சூழ்நிலை!
அங்கே நிலவும்! அறிவும் வளரும்!
யசோதா பள்ளி சென்று விட்டால்
பெற்றோர் நூலகக் கவனம் கொள்வார்!
வருவார் பெறுவார் புத்தகப் படிப்பு!
வாழ்த்திச் செல்வார் நிறை மனதோடு!
புத்தகப் படிப்பு மிக முக்கியம் என
புதிது புதிதாய் நூல்கள் சேர்த்தனர்!
விழிகள் திறந்தன! வியப்பால் விரிந்தன!
வாசிக்க வைத்த யசோதா வாழ்க!