மாலை நேரம். ஒரு வண்ணத்துப் பூச்சி கறுப்பு நிறத்தில் இருந்தது. அது தோட்டத்திற்குச் சென்றது. அங்கு பல வண்ண மலர்களைப் பார்த்தது! மலர்களைச் சுற்றி பல வண்ணத்துப் பூச்சிகள் பறந்தன. எங்கும் வண்ணமயமாய் இருந்தது. கறுப்பு நிற வண்ணத்துப் பூச்சிக்கு மிகவும் வருத்தமாகி விட்டது!
சோகத்துடன் தோட்டத்தைச் சுற்றி வந்தது. சிறிது நேரம் மழை பெய்து ஓய்ந்தது. வண்ணத்துப் பூச்சி ஆகாயத்தைப் பார்த்தது. அங்கு அழகிய வானவில்!
""ஆஹா!.... எவ்வளவு அழகு!.... எத்தனை வண்ணங்கள்!... நானும் உயரப் பறந்து அங்கு செல்வேன்!... அந்த வானவில்லை உரசியவுடன் என் உடலில் வண்ணங்கள் தோன்றும்!'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.
உடனே உயரப் பறந்தது! வான வில்லை அடைய அது மிகவும் முயற்சி செய்தது! ஆனால் வானவில்லோ வெகு உயரத்தில் இருந்தது! கறுப்பு வண்ணத்துப் பூச்சியோ கடவுளை வேண்டிக்கொண்டு மேலும் முயற்சி செய்து தன் இறக்கைகளை விரித்து படபடவென்று பறந்தது!
வானவில் அருகில் அதனால் செல்ல முடியவில்லை!.
வழியில் கடவுள் எதிர்ப்பட்டார். ""உனக்கு மெல்லிய இறகுகள்!.... நீ ஏன் இவ்வளவு மேலே பறக்கிறாய்?'' என்று கேட்டார்.
""வானவில் போல் நானும் வண்ணமயமாக வேணும்!....அதற்குத்தான்!''
""அவ்வளவுதானே?''
""ஆம்!'' என்று சொல்லிக்கொண்டு கடவுளின் கைகளில் அமர்ந்தது. கடவுள் மற்றொரு கையால் அதைத் தொட்டார். கடவுளின் ஸ்பரிசம் பெற்றவுடன் வண்ணத்துப் பூச்சி பல வண்ணங்களில் மிளிர ஆரம்பித்தது!