அணிலைப் பாரு தம்பி - அதன்
அழகைப் பாரு தம்பி! - பட்டுத்
துணி போல் மென்மை கொண்டு - அது
தாவும் பாரு தம்பி!
முன்னங்காலைத் தூக்கி - அது
முழிக்கும் பாரு தம்பி! - ஒரு
சின்னக் குழந்தை போலே - அதன்
சேட்டை பாரு தம்பி!
முருங்கை மரத்தில் ஏறி - அது
முருங்கைப் பூவை உதிர்க்கும்! - நாம்
நெருங்கிச் சென்று பார்த்தால் - நமைக்
கண்டு குதித்து ஓடும்!
கொய்யாப் பழத்தைக் கொறிக்கும்! - அது
கொறித்த பழமோ சுவைக்கும்! - பசு
நெய்யின் நிறத்தில் இருக்கும் - அணில்
நெருங்கி வந்து சிரிக்கும்!
குஞ்சம் போன்ற வாலும் - அதன்
குட்டிக் குட்டிக் காலும் - நம்
நெஞ்சை ஈர்க்கும் நாளும் - நம்
நினைவில் என்றும் வாழும்!