சுவர்ணபுரியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜா விமலாதித்தனுக்கு சற்று கர்வம் ஏற்பட்டது. அவரது சபையில் சுகவனேஸ்வரர் என்ற அறிஞர் மந்திரியாக இருந்தார்.
ஒரு நாள் விமலாதித்தன் சுகவனேஸ்வரரை அழைத்து, ""மந்திரியாரே, எல்லோரும் கடவுளே எல்லோரையும் விடப் பெரியவர் என்கிறார்கள். ஆனால் நான்தானே இந்த ராஜ்ஜியத்தை ஆட்சி செய்கிறேன்.... உண்மையில் இந்த ராஜ்ஜியத்தில் யார் பெரியவர்?..... நானா?...., கடவுளா?...'' என்று கேட்டார்.
""இதிலென்ன சந்தேகம் நிச்சயமாக நீங்கள்தான் கடவுளைவிடப் பெரியவர்!'' என்றார் சுகவனேஸ்வரர்.
விமலாதித்தனுக்கு முகம் மலர்ந்தது. இருந்தாலும் சுகவனேஸ்வரரைப் பார்த்து, ""எல்லோரும் கடவுளே பெரியவர் என்கிறார்கள்!.... எப்படி நான் கடவுளைவிடப் பெரியவன் என்று அவ்வளவு நிச்சயமாகக் கூறுகிறீர்கள்?.... சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்!'' என்றார் மன்னர்.
""சரி,.... தங்களுக்கு ஒருவனைப் பிடிக்கவில்லை என்றால் அவனைத் தாங்கள் நாடு கடத்திவிட இயலும்!.... இல்லையா?''
""ஆமாம்! ''
""ஆனால் கடவுளுக்கு ஒருவனைப் பிடிக்காவிட்டால் அவனை நாடு கடத்த முடியாது!''
""எப்படி?''
""உங்கள் ஆட்சி எல்லை குறுகியது!..... அதனால் உங்களுக்குப் பிடிக்காதவனை நாட்டை விட்டு விரட்டிவிடலாம்!.... ஆனால் கடவுளுடைய சாம்ராஜ்ஜியமோ எல்லையற்றது. எல்லாமே அவரது ஆளுகைக்கு உட்பட்டதாக இருப்பதால் தனக்குப் பிடிக்காதவனை அவர் எப்படி நாடு கடத்தமுடியும்?'' என்று சுகவனேஸ்வரர் புன்னகையுடன் கூறினார்.
விமலாதித்தனுக்கு ஏற்பட்ட கர்வம் உடனே அடங்கியது. எல்லாம் வல்ல இறைவனின் சக்திக்குத் தான் கட்டுப்பட்டவன் என்பதை உணர்ந்துகொண்டான் அவன்.