தண்ணீர் ஊற்றா திருந்தாலும்
தானே ஓங்கி வளர்ந்திடுமாம்!
மண்ணில் மாந்தர் பயனுறவே
மகிழ்ந்தே உதவி செய்திடுமாம்!
குட்டைப் பாளை பால் வடித்தே
குடித்திடப் பதநீர் கொடுத்திடுமாம்!
கொட்டும் அனலாம் கோடையிலே
குளுகுளு நுங்கு தந்திடுமாம்!
பழுத்த பின்னே தரையில் விழும்
பனம்பழச் சாறு இனித்திடுமாம்!
பழத்தின் கொட்டை மணலினிலே
பதிந்தே கொடுப்பது பனங்கிழங்காம்!
விரித்துக் கட்டிய குருத்து மட்டை
வீசும் விசிறி யாகிடுமாம்!
பருத்த மட்டையைப் படியவைத்தே
பாங்காய்க் கூரை வேய்ந்திடலாம்!
தன்னிடம் உள்ள எல்லாமும்
தன்னையும் மகிழ்ந்தே கொடுப்பதிலே
மண்ணில் உயர்ந்த பனைமரத்தின்
மாண்பினை நினைந்தே போற்றிடுவோம்!
- புலேந்திரன்