மந்திரியுடன் வேட்டைக்குச் சென்றான் ஒரு அரசன். களைப்படைந்து இருவரும் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த கல் ஒன்று அரசனின் தலையில் பட்டு ரத்தம் வந்துவிட்டது!
கல்லெறிந்தது யார் என்று அறிய நாலாபுறமும் வீரர்கள் சென்றனர். மந்திரியும் ஒரு புறம் தேடினார். ஒரு மாமரத்தின் அடியில் ஒரு சிறுவன் நிற்பதைப் பார்த்தார். அருகில் இரண்டு மாங்காய்கள் விழுந்திருந்தன.
அவனிடம், ""நீதான் கல் எறிந்தாயா?''
""ஆமாங்க மாங்கா அடிச்சேன்!'' என்றான் சிறுவன்.
சிறுவன் எறிந்த கல்தான் அரசனின் மீது பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டார் மந்திரி. சிறுவனை அழைத்துக்கொண்டு, மாங்காய்களையும் எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்றார் மந்திரி.
அரசன் சிறுவனிடம்,
""நீதான் அந்தக் கல்லை எறிந்தாயா?'' என்று கேட்டான்.
""ஆமாங்க''
""ஏன் எறிந்தாய்?''
""மாங்காய் அடிச்சேன்!''
""மாங்கா விழுந்ததா?''
""ஆமாங்க.... ரெண்டு மாங்கா விழுந்தது... அதோ அந்த மந்திரி கையிலே இருக்கே அதான்!''
""சரி, இனிமே மாங்காய் அடிக்கும்போது அக்கம்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு கல்லெறிய வேண்டும் புரிந்ததா?''
""சரிங்க!''
""நீ போகலாம்!''
""சரிங்க.... அந்த மாங்காய்கள்?... நீங்களே வெச்சுக்கப் போறீங்களா?...''
கள்ளங்கபடமற்ற சிறுவனின் பேச்சைக் கேட்ட மன்னருக்கு சிரிப்பு வந்துவிட்டது! மந்திரியிடம் இருந்த மாங்காய்களை புன்னகையுடன் அவனிடம் கொடுத்தார்.
""நீங்க ஒண்ணு வெச்சுக்கோங்க.... எனக்கு ஒண்ணு போதும்!'' என்ற சிறுவனின் பேச்சு அரசருக்கு மேலும் வியப் கலந்த சிரிப்பை மூட்டியது.
""ரெண்டையும் நீயே வைத்துக்கொள்... ''
சிறுவனுக்கு ஏதாவது தண்டனை கிடைக்கும் என நினைத்த மந்திரிக்கு இது ஆச்சரியமாய் இருந்தது.
மந்திரியிடம் அரசர், ""சிறுவன் மாங்காய் அடித்திருக்கிறான். மரத்தில் காயம் பட்டிருக்கும். ஆனால் மரம் அவனைத் தண்டிக்கவில்லை. மாறாக அவனுக்கு இரண்டு மாங்காய்களைத் தந்திருக்கிறது. ஆறாவது அறிவில்லாத மரமே அப்படி நடந்து கொண்டிருக்கும்போது, ஆறறிவு படைத்த மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?.... தண்டிப்பது மனித இயல்பு.... மன்னிப்பது தெய்வ குணம் இல்லையா?'' என்றார்.
""உண்மைதான்'' என்றார் மந்திரி.
""சொல்லப்போனால் மரங்கள் தெய்வீக இயல்பு கொண்டவை என்பதை நான் உணர்கிறேன்'' என்றார் மன்னர்.