ஒரு கிராமத்து வீட்டில் எலி, சேவல், ஆடு மூன்றும் இருந்தன. ஒருநாள் அந்த வீட்டில் எலிப்பொறி வைக்கப்பட்டிருந்ததை எலி கண்டது. "இந்த வீட்டில் எலிப்பொறி இருக்கிறது. அதில் யாரும் மாட்டிக் கொள்ளாதீர்கள்' என்று சேவலிடமும், ஆட்டிடமும் சொன்னது.
அதற்கு சேவல், "எலிப்பொறி உனக்குத் தொடர்புடைய விஷயம். நான் ஏன் கவலைப்பட வேண்டும்?' என்றது. ஆடும், "எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீ மட்டும் அகப்படாமல் பார்த்துக் கொள்' என்றது.
அன்றிரவு எலிப்பொறியில் ஏதோ அகப்பட்ட சத்தம் கேட்டவுடன், அந்த வீட்டுப் பெண் இருட்டில் அந்தப் பொறியில் கை வைத்தார். பொறியில் மாட்டியது பாம்பாக இருந்ததால் அது அவரைக் கடித்துவிட்டது. மருத்துவரைக் கொண்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றிவிட்டனர்.
அந்தக் கிராமத்து வழக்கப்படி அந்தப் பெண் உடல்நிலை தேறுவதற்கு அந்தச் சேவலைக் கொன்று அதன் சாறு கொடுக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண்ணைப் பார்க்க வந்த உறவினர்களுக்கு அந்த ஆடும் விருந்தானது.
விபரீதங்களைப் புரிந்து கொள்பவர்கள் தனக்கென வைக்கப்பட்ட பொறிகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். எச்சரிக்கை விடுத்தும் அலட்சியப்படுத்துபவர்கள் அவதிப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கையுடன் நடப்பவர்களுக்கு எந்தவிதமான தீங்குகளும் ஏற்படாது. "நமக்கு வராது' என்ற அலட்சியப் போக்கை விட்டொழித்து, நம்மைச் சுற்றி நடப்பது நமக்கும் எற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும்.
(முனைவர் இரா.திருநாவுக்கரசின் "கரோனாவும் பொறுப்புணர்வும்' கட்டுரையிலிருந்து...)