மலையில் பிறந்து மண்ணில் தவழ்ந்து
மறிகடல் நோக்கியே ஓடும்!
இலைகள் மரங்கள் இருபுறக் கரைகள்
எல்லாமும் தாக்கியே சாடும்!
ஆறென விளங்கி அலைபுரள் தண்ணீர்
அணைகளில் தேங்கிக் கிடக்கும்!
உண்ணச் சோறும், குடிக்க நீரும்
உதவும் நதி நன்நீரால்!
நெல்லும் கரும்பும் நீளிலை வாழையும்
நிறைந்து வளர்ந்து செழிக்கும்!
அல்லும் பகலும் ஆற்றின் நன்னீரால்
அமைதியும் வளமையும் கொழிக்கும்!
ஆறில்லா ஊருக்கு அழகில்லை என்றே
ஆன்றோர் உரைத்தனர் அன்றே!
நீரில்லா ஆறாய் இருப்பினும் மாசு
நிறைக்காமல் காப்போம் நாம் நன்றே!
- முத்து முருகன்