கண்ணொரு பக்கம் கருத்தொரு பக்கம்
என்றிருந்தாலே பயன் வருமா?
கண்ணும்கருத்தும்ஒன்றென இருந்தால்
எண்ணிய தைபெற தடை வருமா!
நெஞ்சொரு பக்கம் நினைவொரு பக்கம்
என்றிருந்தாலே பலன் வருமா?
நெஞ்சில் நிறைந்த நினைவுகளாலே
நெகிழும் மனங்கள் அதனாலே
நன்றொரு பக்கம் தீதொரு பக்கம்
நாமும் வைத்தால் நலம் வருமா?
நன்றேஒன்றென; ஒன்றே நன்றென
கொண்டால் நமக்குள் பகை வருமா!
ஒன்றென இருக்கும் உலகம் பிரிந்தால்
ஒற்றுமை நம்மிடம் நிலைத்திடுமா?
நாமோர் குலமென வாழ்தல் பலமென
நவின்றால் பேதம் விலகிடுமே?
ஒவ்வொரு துளிகளும் மழையாய்ப் பொழிய
மறுத்தால் பயிர்களும் விளைந்திடுமா?
கன்றும், பசுவும் போல் நாமிருந்தால்
கனிவுடன் இணைந்து பழகிடலாம்!
காரிருள் போக்கிய கதிரவன் போலே
கவினுறு உலகம் படைத்திடுவோம்;
காற்றென வீசும் ஆற்றலைச் சேர்த்துக்
கற்றால் பிறர்துயர் துடைத்திடலாம்!