இப்போதெல்லாம் அடிக்கடி ரோபோ பற்றிப் பேசப்படுகிறது. மனித மூளையை மிஞ்சி விடுமா இந்த ரோபோ?
பதில்: இன்னும் 16 ஆண்டுகளில் இது நடக்கும் என்று சிலரும் 2100-ஆம் ஆண்டுவாக்கில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று இன்னும் சிலரும் கூறுகிறார்கள்.
இதெல்லாம் மனிதனின் சோம்பேறித்தனத்தால்தான் வருகிறது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் எந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துத் தானும் எந்திரமாகவே மாறிப் போகும் நிலைக்குத் தன்னைத் தானே ஆளாக்கிக் கொண்டுவிட்டான் மனிதன்.
ஆனாலும் சிலர் நம்பிக்கை இழக்கவில்லை. எப்படியிருந்தாலும் இந்த ரோபோக்களைப் படைத்தது மனிதன்தானே. அவனை அவற்றால் எப்படி மிஞ்ச முடியும்? அவன் கொடுத்த அறிவைத்தானே அவை பயன்படுத்துகின்றன? என்றெல்லாம் கேள்விகள் உள்ளன.
மேலும் ஒரு கப் காபி கீழே கொட்டிவிட்டால் மனித மூளை உடனே காபி கொட்டிவிட்டது, அந்த இடத்தைத் துடைத்து விட வேண்டும், இல்லாவிடில் கறை படிந்துவிடும் என்றெல்லாம் நொடியில் தீர்மானித்து விடுவதைப் போல ரோபோக்களால் முடியாது என்கிறார்கள். இந்தக் கறை படிந்துவிடும் என்ற தீர்மானத்துக்கு வர ரோபோக்களால் சீக்கிரம் முடியாதாம். பலவித கணக்குகளைப் போட்டு, கூட்டிக் கழித்துப் பெருக்கித்தான் ஒரு முடிவுக்கு வர அவற்றால் முடியுமாம். அப்படியானால்...?