கேள்வி: கடலின் ஆழமான பாகத்தின் தரையை மனிதனால் தொட்டுவிட முடியுமா? தொட்டிருக்கிறார்களா?
பதில்: தொடமுடியும் என்றுதான் தோன்றுகிறது. இதுவரை மனிதன் பெருங்கடல்களில் 35, 858 அடி ஆழம் வரைதான் சென்றிருக்கிறான். இதற்கு மேல் ஆழமான பகுதி, "சேலஞ்சர் டீப்' என்று அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் ஆழம் 10,904 மீட்டர்கள் (36,070 அடிகள்).
இவ்வளவு ஆழத்துக்குள் சென்றால் மனிதன் நீரின் அழுத்தத்தால் மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிடும். ஆனாலும் விடாமுயற்சி கொண்ட மனிதன் இதற்கும் முயற்சி செய்திருக்கிறான். 1960-ஆம் ஆண்டு ஆண்டு அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டேன் வால்ஷ் என்பவரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளரான ஜாக்விஸ் பிக்கார்ட் என்பவரும் இந்த சேலஞ்சர் டீப் பகுதியின் மிக ஆழமான பகுதியை அடைந்து, 20 நிமிடங்கள் வரை அங்கிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கோளம் ஒன்றின் உதவியுடன் இந்தச் சாதனையைச் செய்தார்கள். 2012-ஆம் ஆண்டு, டைட்டானிக் படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனும் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மனிதனால் முடியாதது எதுவுமில்லை.