சின்ன அழகு பொம்மையாம்!
சிரிக்கும் அழகு பொம்மையாம்!
பின்னல் முடித்துப் போடுவேன்!
பிச்சிப் பூவைச் சூட்டுவேன்!
சோறு அதற்கு ஊட்டுவேன்!
சொடுக்குப் போட்டுக் காட்டுவேன்!
பார்ப்பாய் என்று நிலவையும்
பார்க்கத் தொட்டில் ஆட்டுவேன்!
அம்மா அதற்கு நானன்றோ?
அதுவும் எனது சேயன்றோ?
சும்மா அல்ல என் அம்மா
சொல்லித் தந்தாள் நேசிக்க!
"உலகில் உள்ள உயிர்களை
உண்மை அன்பு காட்டியே
பழக வேண்டும் அன்புடன்
பண்பில் சிறந்த பண்பது!'
என்று சொல்லித் தந்தவள்
எனது அம்மா என்பதால்
கள்ளம் இல்லா நீங்களும்
கருணை கொண்டு வாழுங்கள்!