சோளக்கொல்லை பொம்மை பாரு
ஜோராய் நிற்கும் அழகைப் பாரு
வாட்ட சாட்ட மாய் நின்று
தோட்டம் காக்கும் தோரணை பார்!
கதிர்களைத் தின்ன திரண்டு வரும்
காக்கை குருவி கூட்டத்தின்
பார்வையில் இது பட்டதுமே
பதறியடித்து ஓடிவிடும்!
வெயிலைக் கண்டு ஓடாது!
மழையைக் கண்டு ஒதுங்காது!
மின்னல் கண்டு மிரளாது!
கொண்ட கடமையில் தவறாது!
கூலி உயர்வு கேட்காது!
கோஷம் எதையும் போடாது!
வேலை நிறுத்தம் செய்யாது!
வீதியில் ஊர்வலம் போகாது!
கால நேரம் பார்க்காது!
கண்ணைச் சிறிதும் இமைக்காது!
காவல் காக்கும் இவர் போல
கடமை வீரர் வேறு உண்டோ?