தொலைபேசியை எடுத்தவுடன் "ஹல்லோ' என்கிறோமே, இது எப்படிப் புழக்கத்தில் வந்தது?
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண் டர் கிரஹாம் பெல், முதன் முதலில் பேசிய சொல் இது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. அதாவது அவரது உதவியாளரின் பெயர் "ஹல்லோ' (ஹலோ-இவருடைய மனைவியின் பெயர் என்றும் கூறுவர்) என்பதாகவும், அவரை மற்றொரு அறையில் இருக்க வைத்து, தனது தொலைபேசியை இயக்கியவுடன் அவரிடம் தனது குரல் கேட்கிறதா என்பதற்காக "ஹலோ, நான் பேசுவது கேட்கிறதா?' என்று கேட்டதாகவும் கூறுவார்கள்.
ஆனால், இது உண்மையில்லை. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் "அஹோய்' (AHOI) என்றுதான் தொலைபேசியை எடுத்தவுடன் வாழ்த்தாகச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். "அஹோய்' என்பது அக்காலத்தில் வாழ்த்துச் சொல்லாக இருந்தது. ஆனால், தொலைபேசியை மேலும் மேம்படுத்திய தாமஸ் ஆல்வா எடிசன், தொலைபேசியை எடுத்தவுடன் "ஹல்லோ' என்று சொல்வதை வழக்கமாக்கினார். இந்த ஹல்லோவிற்கு அர்த்தம், வெறுமனே ஆச்சர்ய உணர்வுதான். அதாவது எதிர்பாராமல் பழைய நண்பர் ஒருவரைப் பார்த்தவுடன், ஆச்சரியத்துடன் ஹாய், ஹேய் என்றெல்லாம் நமது உதட்டில் வருமே அது போன்ற ஒரு சொல்தான் இந்த ஹல்லோ. அதுவே காலப்போக்கில் "ஹலோ' ஆகிவிட்டது!