மலையைப் போல ஆல மரமும்
அழகாய்த் தோன்றுதே - அது
தலைக்கு மேலே கிளைகளை விரித்தே
குடைபோல் நிற்குதே!
தன்னை நாடி பறந்தே வந்திடும்
பறவைகள் அனைத்துமே - மேலே
தங்கிக் கொள்ள தனது கிளையில்
இடத்தைச் கொடுக்குதே!
குட்டிக் குட்டியாய் ஆல மரத்தின்
பழங்கள் இருக்குதே!-அவற்றை
கொத்திக் கொத்தி பறவைகள் தின்றே
பசியைப்போக்குதே!
ஆல இலையும் ஆடு தின்ன
உணவாய் ஆகுதே! - பல்லும்
ஆலம் விழுதால் துலக்கி வந்தால்
உறுதி யாகுதே!
சிறுவர் கட்டி ஊஞ்ச லாட
சிறிய விழுதுமே! - தரையில்
பெரிய விழுதும் ஊன்றி நின்றே
மரத்தைத் தாங்குமே!
வாழ்ந்தால் ஆல மரத்தைப் போல
வாழ வேண்டுமே!- நாம்
வாழ்ந்ததைப் பற்றி ஊரார் புகழ்ந்தே
பேச வேண்டுமே!