

ஏ.ஜி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பொன்மாலை பொழுது'. கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மாடல் அழகி காயத்ரி நடிக்கிறார். கிஷோர், லெஷ்மி, தாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, புதுமுக இயக்குநர் ஏ.சி. துரை இப்படத்தை இயக்குகிறார். சினிமாவில் அறிமுகமாகும் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவிடம் பேசிய போது, ""சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சின்ன வயதில் இருந்தே இருந்தது. தாத்தா போல் கவிஞர் ஆக வேண்டியதுதானே எனப் பலர் கேட்டார்கள். அவர் அந்தத் துறையில் நிறைய சாதித்து விட்டார்.
இனி வரப் போகும் தமிழ் தலைமுறைகளுக்கு அவர் சிறந்த சாதனையாளராகத் திகழ்வார். ஆனால் எனக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்தது. சினிமாவில் நினைத்தவுடன் வந்து நடித்து விட்டு போய் விட முடியாது. நிறைய உழைப்பு தேவை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆரம்பத்தில் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.
சினிமாத் துறையின் சூட்சமங்கள் புரிய ஆரம்பித்தன. இப்போது நிறைய திறமைகள் என்னிடம் இருப்பதாக நம்புகிறேன். நிறைய உழைக்கவும் ஆசை இருக்கிறது. கவிஞர் வைரமுத்துவின் ""பொன்மாலை பொழுது...'' என்கிற பிரபலமான வரியைப் படத்துக்கு தலைப்பாக வைத்திருப்பது பற்றி கேட்கிறார்கள். அந்த வரி நன்றாக இருந்ததே அதற்குக் காரணம். சிறந்த நடிகனாக பெயர் எடுத்து நிலைத்து நிற்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் ஆதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.