மலையேறும் மாணவர் படை!

கோடை சீசனில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் மே மாதத்தில் தவறாமல் காணக்கூடிய ஒரு காட்சி உண்டென்றால் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவிகள் சீருடையுடன் சாலைகளில் அணிவகுத்து செல்லும் காட்
மலையேறும் மாணவர் படை!
Updated on
2 min read

கோடை சீசனில் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் மே மாதத்தில் தவறாமல் காணக்கூடிய ஒரு காட்சி உண்டென்றால் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவிகள் சீருடையுடன் சாலைகளில் அணிவகுத்து செல்லும் காட்சியேயாகும்.

இந்த அணிவகுப்பு உதகையில் எதற்காக?

""நாட்டின் பல்வேறு மாநிலங்களிருந்து மலையேற்றப் பயிற்சிக்காக வந்தவர்கள்தான் இவர்கள். இந்தியா மொழி வாரியாக பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதனால், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கேட்டால் நான் ராஜஸ்தானி எனவும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கேட்டால் நான் குஜராத்தி எனவும் பதிலளிப்பர். ஆனால், உங்களைக் கேட்டால் நான் ஒரு இந்தியன் என கூற வேண்டும்.

இந்தியன் என்று கூறும் போதுதான் நாட்டுப்பற்று வளர்கின்றது''- இந்த அறிவுரை உதகையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவிகளிடத்தில் வெலிங்டனிலுள்ள ராணுவ பயிற்சி மையத்தின் கர்னல் மெகன்திரத்தா வழங்கியதாகும்.

மற்றொரு நாள் முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், ""என்சிசி மாணவிகள் நீலகிரி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடும்போது உடல் வலிமையை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் மன வலிமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அந்த அளவுக்கு நாட்டுப்பற்றை வளர்க்கக்கூடிய ஒரு முக்கிய அம்சமாகவும் இந்த மலையேற்றப் பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக கோவை மண்டல என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் எஸ்.கோபாலன், பயிற்சி அலுவலர் மேஜர் சுரேஷ்குமார் மற்றும் என்சிசி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்

களாவன:

""என்சிசி மாணவ, மாணவியருக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஆண்டு முழுதும் பல்வேறு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டு பயிற்சி முகாம் தவிர, தல் சைனிக் முகாம், மலையேற்ற பயிற்சி முகாம், பேசிக் லீடர்ஷிப் முகாம், அட்வான்ஸ் லீடர்ஷிப் முகாம், குடியரசு தின அணிவகுப்பு முகாம், எஸ்.எஸ்.பி. ஸ்கிரீனிங் முகாம், துப்பாக்கி சுடும் முகாம் ஆகியவை முக்கியமானவையாகும்.

என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படையின் சார்பில் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நீலகிரியில் மாணவிகளுக்கான மலையேற்றப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மலையானது மலையேற்றப் பயிற்சிக்கு இயற்கையாகவே அமைந்ததாகவும், உலக அளவில் அனைவராலும் விரும்பும் இடமாக இருப்பதாலும் இங்கு தொடர்ந்து மலையேற்றப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாமில் மாணவிகள் நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, தைரியம், தன்னம்பிக்கை, தலைமைப்பண்பு, இயற்கை அழகை ரசித்தல், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, சுய கட்டுப்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் மாணவிகளுடன் சேர்ந்து தங்குவதால் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றையும் கொள்கின்றனர்.

ஆண்டுக்கு 1,000 மாணவிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு அவர்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவும் நீலகிரி மலையில் மொத்தம் 14 நாட்கள் தங்கி 90 கி.மீ.தூரம் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். வழியில் 4 இடங்களில் இரவில் தங்குவர். இவர்களுக்குப் பாதுகாப்புக்காக மகளிர் என்சிசி அலுவலர்களும், ராணுவ வீரர்களும் செல்வர். முகாமின் மொத்த காலம் 20 நாட்களாகும்.

நடப்பாண்டில் நடைபெற்ற முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகளோடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தராஞ்சல் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளும் பங்கேற்றனர்'' எனப் பெருமையுடன்

தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com