சினி மினி

விஜய்யுடன் நடிக்கிற அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றதுமே
சினி மினி
Updated on
2 min read

விஜய்யுடன் நடிக்கிற அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள் என்றதுமே, பரவசமாகிறார் அமலாபால். ""விஜய் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் "கில்லி'. கிட்டத்தட்ட பத்து முறைக்கு மேல் அதை பார்த்து விட்டேன். விஜய்யை விட அதில் நடித்திருந்த த்ரிஷாவைத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தை ரீமேக் செய்தால் த்ரிஷா கேரக்டரில் நடிக்க நான் ரெடி.'' ஹீரோவாக யார் நடிக்க வேண்டும் அதையும் சொல்லி விடுங்கள்'' என்றால், "'யாரு நம்ம விஜய்தான்.'' எந்த விஜய் என்றால் கோபமாகிறார். ""என் மானசீக குரு இயக்குநர் விஜய் இயக்க, இளைய தளபதி விஜய் அந்த படத்தில் நடிக்க வேண்டும். இதற்கு மேல் விளக்கம் தர வேண்டுமா? "கில்லி 2' எடுத்தாலும் சரிதான்'' என முடிக்கிறார் அமலாபால்.

புற்றுநோய் சிகிச்சையிலிருந்து மீண்ட மம்தா மோகன்தாஸ், பிரஜித் பத்மநாபன் என்பவரை மணந்துக் கொண்டார். திருமணத்துக்குப் பின் ஓரிரு படங்களிலும் நடித்தார். தமிழில் "தடையறத் தாக்க' படத்தில் நடித்தார். இந்நிலையில் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவகாரத்து பெற்றுள்ளார். ""எனக்கு இது சோதனையான காலம். நான் எதிர்பார்க்காத சில விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்து கொண்டே வருகிறது. மரணத்தின் வாசலை தொட்டு விட்டு வந்த எனக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை. ஆனால் இப்போதும் நான் சோர்ந்து விடவில்லை' என விவகாரத்து பற்றி தன் டிவிட்டர் பகுதியில் கூறியிருக்கிறார் மம்தா. மம்தாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாள் 11.11.2011. விவகாரத்து பெற்ற நாள் 12.12.2012.

"விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை' என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "நீங்காத எண்ணம்.' "நீங்கள் கேட்டவை' பானுசந்தர் மகன் ஜெயந்த் நாயகனாக நடிக்கிறார். புதுமுகம் அங்கீதா ஹீரோயினாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, எழுதி இயக்குகிறார் புதுமுகம் எம்.எஸ்.ஷாஜஹான். ""அவனை கொண்டு வா... என்ற வார்த்தை அவனை "கொன்று வா' என உணரப்பட்டதால் ஒரு சாம்ராஜ்யமே அழிந்ததாக வரலாறு உண்டு. குடும்பத்தில், நண்பர்களிடத்தில், உறவுகளிடத்தில் என எங்கு பார்த்தாலும் புரிதல்களே இல்லை. அவ்வாறான நிலை எந்த மாதிரியான விபரீதங்களை உருவாக்குகிறது என்பதைத்தான் "நீங்காத எண்ணம்' படத்தில் திரைக்கதையாக்கி இருக்கிறேன்'' என்கிறார் இயக்குநர்.

தலைகீழாக கொட்டும் அருவி, பாறையின் உச்சியில் டூயட், யானையின் ஒவ்வொரு அசைவுகள் என "கும்கி'யில் பிரம்மாண்டமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ஏற்கெனவே "மைனா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்திருந்தார்.

""எல்லாமே வனப்பகுதிகள் என்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்களை கொண்டுதான் படமாக்க முடியும். நினைத்த நேரத்தில் எதையும் எடுத்து விட முடியாது. அதற்கான உழைப்புதான் என்னை பேச வைத்திருக்கிறது.'' என்கிறார். "மைனா'வில் உங்களுக்கான அங்கீகாரம் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? என்றால். ""விருதுகள் எல்லாமே கமர்ஷியல் ஆகிவிட்டது. நான் விருதுகளை எதிர்பார்ப்பதில்லை. பாலுமகேந்திராவின் உதவியாளர்களுக்கு மட்டுமே விருது கிடைக்கிறது என்றால், மற்ற யாருமே இங்கு திறமைசாலிகள் இல்லையா?'' என கேட்கிறார் சுகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com