சினி மினி

முன்னணி நடிகைகள் பலரும் விதவிதமான காஸ்ட்யூம்களை அணிந்து தோற்றமளிப்பதைத்தான் விரும்புவர். ஆனால் தேசிய விருது பெற்ற "த டர்ட்டி பிக்சர்' வித்யா பாலனோ சேலை அணிவதைத்தான் விரும்புகிறார். விதவிதமான சேலைகளை அ
சினி மினி
Updated on
2 min read

முன்னணி நடிகைகள் பலரும் விதவிதமான காஸ்ட்யூம்களை அணிந்து தோற்றமளிப்பதைத்தான் விரும்புவர். ஆனால் தேசிய விருது பெற்ற "த டர்ட்டி பிக்சர்' வித்யா பாலனோ சேலை அணிவதைத்தான் விரும்புகிறார். விதவிதமான சேலைகளை அணிய வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னைப் பெண்ணாகப் படைத்திருக்கிறார்; அதனால் சேலைதான் எப்போதும் என்னுடைய ஃபேவரைட் டிரஸ் என்கிறார்.

அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோரின் "டாக் ஷோ'க்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி. யில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது அமீர்கானின் "சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சி. உண்மையான சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டு கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி, மராத்தி உள்பட ஒன்பது மொழிகளில் ஒளிபரப்பாகிறது. ஒன்றுக்கு ஆறு மடங்காக விளம்பர வருமானம் கொட்டுவதால் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்ய விளம்பர நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் ஜி.வி.பிரகாஷின் தாயாருமான ரெஹைனா "மன்ஜோட்டில் வீடு' என்ற மலையாளப் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார். சுகுமாரன் இயக்கும் இந்தப் படத்தில் நாட்டுப்புற இசையையும் மேற்கத்திய இசையையும் இணைத்து புதுமையான மெட்டில் ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளார்.

ஜார்கண்டில் உள்ள பிரபல ராஞ்சி மிருகக் காட்சி சாலையில் உள்ள சுந்தரி என்ற பெண் சிங்கத்துக்கு ஆகும் ஒரு வருட பராமரிப்புச் செலவை ஏற்றிருக்கிறார் முன்னாள் உலக அழகியும் முன்னணி பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா.

ஜெயம் ரவி நடிக்கும் "ஆதிபகவன்' படத்தை இயக்கி வரும் அமீர் நீண்ட தாடியுடன் காணப்படுகிறார். இறுதிக் கட்டத்தில் இருக்கும் "ஆதிபகவன்' படத்தை முடித்துவிட்டு "ஜிகாத்' என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். அதற்காகவே இந்த தாடி கெட்-அப். இதற்கிடையில் கமல்ஹாசனிடமும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால் ஸ்கிரிப்டைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் கமல். "ஜிகாத்' படம் தொடங்கினாலும் கமல் அழைத்தால் தனது படத்தை ஒத்தி வைத்துவிட்டு கமல் படத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார் அமீர்.

ரஜினிகாந்தின் "கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. கிராஃபிக்ஸ், அனிமேஷன் உட்பட இறுதிக் கட்டப் பணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெறுவதால் மூன்று நாடுகளுக்கும் மாறி மாறி பறப்பதற்கு ஏற்ப ஓர் அட்டவணையைத் தயாரித்துள்ளார் இயக்குநர் செüந்தர்யா. தீபாவளிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறது படக் குழு.

தமிழில் நடித்து வந்த நிலா இங்கு வாய்ப்பில்லாததால் தன்னுடைய சொந்தப் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் ஹிந்தியில் தீவிரமாக வாய்ப்பு தேடினார். அதன் பலனாக விவேக் ஓபராயுடன் "ஷெர்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படம் புக் ஆனவுடன் சல்மான்கான் எனது நெருங்கிய நண்பர் என "நா காக்காமல்' பேட்டியளித்தார். விவேக்குக்கும் சல்மானுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். அதனால் இந்த ஒரு பேட்டியாலேயே படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com