சினி மினி

அஜித்துடன் "மங்காத்தா' படத்தில் நடித்துவிட்ட லட்சுமிராய்க்கு விஜய்யுடன் நடிப்பதுதான் அடுத்த டார்கெட். இயக்குநர் விஜய் இயக்கும் "தாண்டவம்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமிராய் தன்ன
சினி மினி
Updated on
2 min read

அஜித்துடன் "மங்காத்தா' படத்தில் நடித்துவிட்ட லட்சுமிராய்க்கு விஜய்யுடன் நடிப்பதுதான் அடுத்த டார்கெட். இயக்குநர் விஜய் இயக்கும் "தாண்டவம்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமிராய் தன்னுடைய ஆசையை இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து விஜய்யை வைத்து தான் இயக்கவுள்ள "தலைவன்' படத்தில் ஒரு முக்கியமான ரோல் தருவதாக உறுதியளித்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

 குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கிய "கலகலப்பு' படம் ஏழு கோடி ரூபாய் வரை வசூல் செய்து கல்லா கட்டியுள்ளது. இதையடுத்து இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. படத்தை வெளியிட்ட யு டி.வி. நிறுவனம் ஹிந்தியில் தயாரிக்கிறது. இதற்காக ஒரு பெரும் தொகையை ராயல்டியாக சுந்தர்.சிக்கு வழங்கியுள்ளது யு டி.வி. நிறுவனம்.

 கலிபோர்னியாவில் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோல்டு'ஸ் ஜிம் உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 701 கிளைகளைக் கொண்டுள்ளது. சர்வதேசத் தரத்தில் ஏழு நட்சத்திர ஹோட்டலைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜிம்மின் புதிய கிளை, சென்னை அடையாறில் அண்மையில் தொடங்கப்பட்டது. இதை சர்வதேச மாடல் எவ்லின் சர்மா தொடங்கி வைத்தார். "சென்னையில் சில மணி நேரங்கள்தான் இருந்தேன். ஆனால் அதற்குள் சென்னையைப் பற்றியும் கோலிவுட் திரையுலகம் பற்றியும் தெரிந்துகொண்டேன். அடுத்த முறை சென்னைக்கு வருவதாக இருந்தால் கோலிவுட் படத்தில் நடிப்பதற்குத்தான் வரவேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்' என்று தன் நடிப்பு ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 தெலுங்கின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா "வருவான் தலைவன்' படத்தின் மூலம் முதல் முறையாகத் தமிழுக்கு வருகிறார். சேகர் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்காக ரூ.6.5 கோடி செலவில் ஒரு பிரமாண்டான அரண்மனையை நிர்மாணித்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாலகிருஷ்ணா "நான் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்த் தண்ணீரைக் குடித்துதான் வளர்ந்தேன். என் தந்தை என்.டி.ஆர்., "என்னை தமிழகம் 40 ஆண்டுகளாக அரவணைத்து ஆதரித்தது. அதற்காக தமிழகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என அடிக்கடி கூறுவார். அதற்கேற்ப கிருஷ்ணா நீரைக் கொடுத்துவிட்டோம். என் முதல் தமிழ்ப் படத்தை ஆதரிக்க வேண்டும்' என தமிழில் சரளமாகப் பேசியது பலரையும் கவர்ந்தது.

 தன்னுடைய அடுத்த படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் இயக்குகிறார் ஷங்கர். தமிழில் விக்ரம், தெலுங்கில் பவன் கல்யாண் ஹீரோக்களாக நடிக்க, அஸின் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக ஷங்கருடன் கூட்டணி வைக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

 நகுல் நடிக்க "வல்லினம்' என்ற படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் வில்லனுக்கு மிக முக்கியமான வேடம். இந்த வேடத்தில் நடிக்க பலரைப் பரிசீலித்தும் யாரும் தேர்வாகவில்லை. இந்தச் சூழ்நிலையில் படத்தின் கதையைக் கேள்விப்பட்ட சித்தார்த் "இந்தப் படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன்' என்று தானாகவே வலிய வந்து வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com