புத்தாண்டின் கதை!

வெவ்வேறு நாடுகள், மதம், இனம், மொழியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தனித்தனியாக புத்தாண்டை வைத்துக் கொண்டுள்ள போதிலும்
புத்தாண்டின் கதை!
Updated on
1 min read

வெவ்வேறு நாடுகள், மதம், இனம், மொழியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தனித்தனியாக புத்தாண்டை வைத்துக் கொண்டுள்ள போதிலும், ஜனவரி 1-ம் தேதி பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
 இந்தப் புத்தாண்டு மிக நீண்ட நெடிய வரலாறைக் கொண்டது. கி.மு. 46-ல் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1-ம் தேதியை முதன்முறையாக புத்தாண்டாக அறிவித்தார்.
 ஜனுஸ் என்ற ரோமானியர்களின் நுழைவு வாயில் கடவுள் (கேட் ஆஃப் காட்) பெயரை அடிப்படையாகக் கொண்டே ஜனவரி என்று முதல் மாதத்துக்கு பெயர் சூட்டினார் சீசர். புதுயுகத்துக்குள் பிரவேசிக்க உதவுபவராக அக்கடவுளை ரோமானியர்கள் வழிபட்டு வந்தனர்.
 எனினும் கிறிஸ்தவ மதம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியபோது, அந்நாடுகளில் அறிவிப்பு நாள் (அனவுன்ஷியேசன் டே) என்று கூறப்படும் மார்ச் 25-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது.
 கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி "கடவுளின் அருளால் ஏசு கிறிஸ்து உனது கருவில் உருவாவார்' என்று மேரி மாதாவுக்கு தேவதூதர் கேபிரியல் மார்ச் 25-ல் அறிவித்தார் என்று நம்பப்படுகிறது.
 எனினும் 1066-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இருந்த வில்லியம், சீசரைப் பின்பற்றி ஜனவரி 1-ல் புத்தாண்டைக் கொண்டாட உத்தரவிட்டார். எனினும் அவரது மறைவுக்குப் பின் புத்தாண்டு மீண்டும் மார்ச் 25-க்குத் திரும்பியது.
 சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் 1582-ல் போப் பதிமூன்றாம் கிரிகோரி, ஜனவரி ஒன்றை புத்தாண்டாக பிரகடனப்படுத்தினார். இது படிப்படியாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அன்று முதல் இன்று வரை ஜனவரி 1-ல் புத்தாண்டுக் கொண்டாடங்கள் தொடர்கின்றன.
 பண்டைய ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. கிரிகோரி அறிமுகம் செய்த காலண்டரில் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இத்தாலிய டாக்டர் அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் இந்தக் காலண்டரை வடிமைத்தார். எனினும் போப் கிரிகோரியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதால் அவரது பெயரிலேயே "கிரிகோரியன் காலண்டர்' என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாடாக இந்தப் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. இன்று நாம் வீடுகளில் அலங்கரிப்பது கிரிகோரியன் காலண்டர்தான்.
 புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் யூதர்களுக்கு மட்டும் அது சோகமான நாளாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஜூலியஸ் சீசர் அறிவித்த முதல் புத்தாண்டு அன்றே புரட்சியில் ஈடுபட்ட யூதர்களைக் கொன்று குவித்தார்.
 போப்பாண்டவர் காலத்திலும் புத்தாண்டு தினத்தன்று ரோமில் உள்ள யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத வழிபாட்டில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதனை எதிர்த்தவர்களோ கொல்லப்பட்டனர். யூதர்களின் புனித நூலை அழிப்பது, யூதர்கள் மீது சிறப்பு வரி விதிப்பது என அனைத்தையுமே ஜனவரி 1-ல்தான் போப் கிரிகோரி அரங்கேற்றினார். அதனால்தான் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றினாலும் இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ புத்தாண்டுக் கொண்டாட்டம் ஏதும் கிடையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com