சினி மினி

"விஸ்வரூபம்' படத்தில் கமலை தவிர மற்ற வேடங்களுக்கு இமேஜ் உள்ள நடிகர்கள் கிடையாது.
சினி மினி
Updated on
2 min read

"விஸ்வரூபம்' படத்தில் கமலை தவிர மற்ற வேடங்களுக்கு இமேஜ் உள்ள நடிகர்கள் கிடையாது. இந்த வேடங்களுக்கு பிரபல நடிகர்களைப் பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு பதிலளித்தார் கமல்ஹாசன்: "" இமேஜ் உள்ள நடிகர்கள் எப்போதாவதுதான் என் படங்களுக்கு தேவைப்படுகிறார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை இமேஜ் உள்ள நடிகர்கள் தேவைப்படவில்லை. கதையை நம்பி மட்டுமே நான் களம் இறங்கியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள் பலர் என்னை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்கள். அந்த உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்பட வேண்டும். நிச்சயம் ஏற்படும். குறித்த நேரத்தில் ஷூட்டிங் நடத்தி, முடிப்பது என் படங்களில் இயல்பாக நடக்கும் வேலையாக இருக்கும். அதை இமேஜ் உள்ள நடிகர்கள் செய்துக் கொடுப்பார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது'' என்றார் கமல்ஹாசன்.

நடிகர்கள் விஜய், ஜீவா உள்ளிட்டோருக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் பி.டி.செல்வகுமார் எழுதி, இயக்கும் படம் "ஒன்பதுல குரு'. விநய், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "யுத்தம் செய்', "ஆரோகணம்' படத்துக்கு இசையமைத்த கே இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹாலிவுட்டில் வெளிவந்த "ஹேங் ஓவர்' படக் கதையின் தழுவலில் இப்படம் உருவாகி வருவதாக தகவல்....""இப்படியான செய்திகளை தொடர்ந்து இன்டர்நெட்டில் பரப்பி வருகிறார்கள். அதில் உண்மையில்லை. சிலவற்றின் தாக்கத்தால் சில கதைகள் உருவாகும். இந்த கதைக்கும் ஒரு தாக்கம் இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். நீண்ட நாள்களுக்குப் பின் ஒன்றாக சந்திக்கும் நண்பர்கள், பாண்டிச்சேரிக்கு டூர் போகிறார்கள். அங்கு நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள்தான் கதை'' என்கிறார் பி.டி.செல்வகுமார்.

கன்னட, தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கும் சனாகான் "பிக்பாஸ்' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று இருக்கிறார். பாலிவுட் நடிகர் ராஜீவ் பாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஒரே அறையில் பலருடன் தங்கியிருந்து நாள்களை கழிக்கும் இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றிருந்தாலும் சனாவும் ராஜீவும் பல மணி நேரங்கள் ஒன்றாகப் பேசி சிரித்துக் கொண்டனர். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ""இதுவரை இந்நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்று 90 நாள்கள் கழிந்து விட்டது. ஒரு நாள் கூட இருவரும் காதலுக்கான அடையாளங்களுடன் பேசிக் கொண்டதே இல்லை. காதல் பேச்சு இல்லவே இல்லை. காமெடி பேச்சுதான் அதிகமாக இருந்தது'' என டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார் சனாகான்.

கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஊழல்கள், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட திரை மறைவு வேலைகளையும், திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்னைகளையும் பேசும் படமாக உருவாகிறது "கிரிக்கெட் ஸ்கேண்டல்'. திருநங்கை ரோஸ் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். மற்ற பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். ""ஒய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர், கிளப்பில் நடனமாடும் திருநங்கையை காதலிக்கிறார். ஒருவர் பிரச்னையை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை. இதன் பின்னணியில் கிரிக்கெட் சூதாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. அதில் தொடர்புடையவர்களை சந்தித்து அதற்கேற்றால் போல் திரைக்கதையை அமைத்துள்ளேன்'' என்கிறார் திருநங்கை ரோஸ்.

சாதாரண சந்தான கிருஷ்ணன் தன்னை சந்தமாமா என்று பெயர் மாற்றிக் கொண்டு எழுத்தாளனாக ஆசைப்படுகிறான். அதற்காக அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் அவனுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் எப்படி மாறுகிறது என்பதுதான் "சந்தமாமா' படத்தின் கதை. கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக "ரா ரா' உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்வேதாபாசு நடிக்கிறார். ""நகைச்சுவையை முக்கிய களமாக கொண்டு படம் உருவாகி வருகிறது. எல்லோருக்கும் இதுவாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். எழுத்தாளனாக ஆசைப்படுகிற ஒருவன், பின் அந்த மாயையிலிருந்து விடுபட்டு எப்படி சாதாரண மனிதனாக வாழ்கிறான். அதற்காக அவன் சந்திக்கிற நிகழ்வுகள்தான் படத்தின் திரைக்கதை'' என்றார் கருணாஸ்.






 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com